Publish Date: Fri, 05 Aug 2022 (09:03 IST)
Updated Date: Fri, 05 Aug 2022 (09:12 IST)
வங்கக்கடலில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என தகவல்.
தென்மேற்கு பருவமழை காரணமாக அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டிலும் சில பகுதிகளில் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றன என்று பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த ஜூலை மாதத்தில் இயல்பான அளவை விட 101% கூடுதல் மழை பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் இயல்பைவிட 97% கூடுதல் மழை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து வங்கக்கடலில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக கேரளா, கர்நாடக மாநிலங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மிக கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.