டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று காலை 8 முதல் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது என்பதும், ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த தேர்தல் பின்னடைவைத் தந்துள்ளது என்பதும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறப்பட்ட நிலையில், அந்த கருத்துக் கணிப்புகள் தற்போது உண்மையாகின்றன.
தற்போது வந்துள்ள முன்னிலை நிலவரப்படி, பாஜக 48 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி முதல்வர் அதிஷி பின்னடைவில் உள்ளார் என்பதும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரமேஷ் முன்னிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவில் உள்ளார் என்பதும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் ஆகிய இருவரும் பின்னடைவில் உள்ள நிலையில், அக்கட்சிக்கு இது மிகப் பெரிய தோல்வியாகவே கருதப்படுகிறது.