Publish Date: Mon, 09 Oct 2023 (18:37 IST)
Updated Date: Mon, 09 Oct 2023 (18:39 IST)
இஸ்ரேல் நாட்டிற்கும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் என்ற தீவிரவாத இயக்கத்திற்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். மேலும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுத்துள்ளது.
இந்த நிலையில் திடீர் என காங்கிரஸ் கட்சி பாலஸ்தீனம் நாட்டிற்கு ஆதரவு கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீனம் நாட்டிற்கு ஆதரவு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நில உரிமை, கண்ணியம் மற்றும் மரியாதைக்காக போராடும் பாலஸ்தீன நாட்டு மக்களுக்கு ஆதரவு என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இந்தியாவின் முக்கிய எதிர்கட்சி பாலஸ்தீன நாட்டிற்கு ஆதரவு கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என இரு தரப்பிற்கும் காங்கிரஸ் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
நேற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் இன்று பாலஸ்தீனத்திற்கு ஆதரவு என தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது