Publish Date: Wed, 13 May 2020 (11:10 IST)
Updated Date: Wed, 13 May 2020 (11:12 IST)
தமிழகத்தில் ஊரடங்கு தடைகாலம் முடிய உள்ள நிலையில் கல்லூரிகளில் இரு சுழற்சி முறை வகுப்புகள் நிறுத்தப்பட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட ஊரடங்கு மூன்று கட்டங்களாக தொடர்ந்த நிலையில் மே 17உடன் முடிவடைகிறது. மே 17க்கு பிறகு ஊரடங்கு நான்காவது கட்டமாக நீட்டிக்கப்படும் என்றும் ஆனால் அது இதற்கு முன்னால் அமலில் இருந்த ஊரடங்கை விட மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் பேசியுள்ளார்.
இந்நிலையில் கல்லூரி கல்வி இயக்ககம் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கல்லூரி மேம்பாட்டு பணிகளுக்கான நிதியை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருமுறை சுழற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. அதன்படி காலை மற்றும் மதியம் ஆகிய இரண்டு முறை சுழற்சியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பல அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட்டிட வசதிகள் குறைவாக உள்ளதால் பாதி பட்டய பாட பிரிவுகள் காலை வகுப்பாகவும், மீத பட்டய பாட பிரிவுகள் மதிய வகுப்பாகவும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இவற்றை இணைத்து ஒரே சுழற்சி முறையில் காலை முதல் மதியம் வரை கல்லூரிகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான மேம்பாட்டு பணிகளுக்காகவே நிதி கோரப்பட்டுள்ளதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.