CBSE பொதுத்தேர்வுகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் வினாத்தாள்கள் ஆன்லைனில் விற்கப்படுவதாக வெளியான தகவல் குறித்து சிபிஎஸ்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசின் CBSE பாடத்திட்டத்தில் நடைபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த 15ம் தேதி முதல் தொடங்கிய நிலையில் ஏப்ரல் 4 வரை தேர்வுகள் நடைபெறுகிறது. இந்நிலையில் சமீபமாக CBSE வினாத்தாள்கள் இணையத்தில் லீக் ஆகிவிட்டதாகவும், பணம் கொடுத்தால் வினாத்தாள் பெற்றுத் தருவதாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாக சிலர் மாணவர்களின் பெற்றோர்களை அணுகுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள CBSE நிர்வாகம், வினாத்தாள்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாகவும், எந்த வினாத்தாளும் லீக் ஆகவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் சில விஷமிகள் பண நோக்கத்தில் பெற்றோர்களை குறிவைத்து இதுபோன்ற போலியான செய்திகளை பரப்பி மோசடி செய்ய முயல்வதால் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இவ்வாறு போலியான தகவல்களை பரப்புவோர் மீது, அது மாணவர்களாகவே இருந்தாலும் CBSE விதிகளின்படியும், இந்திய தண்டனை சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K