குடியரசு துணை தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இதனால் அவர் நாட்டின் 15-வது குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அடுத்த துணை குடியரசுத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது வெற்றிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், அமித்ஷா உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு: "நாட்டின் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எனது வாழ்த்துகள்! உங்கள் நீண்டகால பொது வாழ்வு அனுபவம் நாட்டின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். உங்கள் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்."
பிரதமர் நரேந்திர மோடி: "துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். சமூகத்திற்குச் சேவை செய்வதிலும், ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் அவரது வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் நமது அரசியல் அமைப்பு மதிப்புகளை வலுப்படுத்தி, நாடாளுமன்ற விவாதங்களை மேம்படுத்துவார் என்று நம்புகிறேன்."
மத்திய அமைச்சர் அமித்ஷா: "உங்கள் நுண்ணறிவும், நிர்வாக அறிவும் நமது ஜனநாயகத்தில் சிறந்ததை வெளிப்படுத்தி, விளிம்புநிலை மக்களுக்கு சேவை செய்ய உதவும். உங்கள் பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்."
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: "துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். அதேசமயம், இது ஒரு சித்தாந்த போர். ஜனநாயகத்தை பாதுகாக்க சர்வாதிகார போக்குகளைத் தடுக்க வேண்டும் என்பதை இந்தத் தேர்தல் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது."
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்: "துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர் நமது நாட்டின் ஜனநாயக கொள்கைகளுக்குத் தனது கடமைகளை உறுதியுடன் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்."