Publish Date: Thu, 04 Oct 2018 (18:46 IST)
Updated Date: Thu, 04 Oct 2018 (18:48 IST)
தொடர்ச்சியாக உயர்ந்து வந்த பெட்ரோல் டீசல் விலை கட்டுபடுத்தும் முக்கிய முடிவை மத்திய அரசு சார்பில் இன்று அருண் ஜெட்லி அறிவித்தார்.
கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து 90 ரூபாயை நெருங்கி விற்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்பட்டது.
ஆனால், மத்திய, மாநில அரசுகள் வரியினை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தலாம் என்ற கருத்து பரவலாகக் கூறப்பட்டது. இதற்கேற்ப பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் கலால் வரி லிட்டருக்கு 1.50 ரூபாய் குறைக்கப்படுகிறது.
மேலும் எண்ணெய் நிறுவனங்களை அதன் உற்பத்தி செலவலிருந்து லிட்டருக்கு 1 ரூபாயைக் குறைத்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாய் குறைந்துள்ளது.
ஆனால், இந்த முடிவு மக்களுக்காகவா அல்லது தேர்தலுக்காகவா என அடுத்த கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. ஆம், இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் முக்கியமான மாநிலங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
இதனால்தான் இவ்வளவு நாள் பெட்ரோல் விலையை ஏற்றிவிட்டு தேர்தல் நெருங்கியவுடன் விலையை குறைப்பதை போல குறைத்து இருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளது.