அகமதாபாத்திலிருந்து லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர்.
சற்றுமுன் வெளியான தகவலின்படி, விமானம் மேகானி நகர் பகுதியில் உள்ள பிஜே மெடிக்கல் கல்லூரி இளநிலை மாணவர்களுக்கான விடுதியில் உள்ள உணவகத்தின் மீது விழுந்தது. விபத்து நேரத்தில் அங்கே மாணவர்கள் இருந்ததாக அனைத்து இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பான FAIMA தெரிவித்துள்ளது.
FAIMA பகிர்ந்த புகைப்படங்களில், விமானத்தின் ஒரு பகுதி அந்த விடுதியின் கட்டிடத்தில் விழுந்திருந்தது. இதனால் அந்த கட்டிடம் பெரிதும் சேதமடைந்துள்ளதையும் புகைப்படங்களில் காண முடிகிறது.
FAIMA-வை சேர்ந்த டாக்டர் அக்ஷய் டோன்கர்திவே கூறும்போது, "இந்த விபத்தில் 20-30 மாணவர்கள் காயம் அடைந்திருக்கலாம்" என்று கூறினார்.
"அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. BJMC விடுதியில் விமானம் விழுந்ததாகவும், பல எம்பிபிஎஸ் மாணவர்கள் காயமடைந்திருக்கிறார்கள் என தெரியவரும் செய்தி துடிக்க வைக்கிறது. நிலைமையை நாங்கள் கவனித்து வருகிறோம். தேவையான உதவிக்கு தயாராக இருக்கிறோம்," என FAIMA இந்தியா தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளது.