Publish Date: Sun, 24 Mar 2024 (11:44 IST)
Updated Date: Sun, 24 Mar 2024 (11:46 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் சிறையில் இருந்து கொண்டு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
மதுபான கொள்கை வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது சிறையில் இருக்கிறார் என்பதும் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் சில குறிப்பு மூலம் ஒரு சில முக்கிய உத்தரவுகளை தனது அமைச்சரவைக்கு அனுப்பியதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த உத்தரவுகள் என்னென்ன என்பது குறித்து டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி இன்று தெரிவிப்பார் என்றும் அந்த உத்தரவு குறித்த கூடுதல் தகவல்களை அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் சிறையில் இருந்து கொண்டே அவர் ஆட்சி நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.