Publish Date: Fri, 23 Mar 2018 (13:05 IST)
Updated Date: Fri, 23 Mar 2018 (13:10 IST)
லோக்பால், லோக் ஆயுக்தாவை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டெல்லியில் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளார்.
ஜன் லோக்பால் அமைப்பை அதாவது பிரதமர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2011ம் ஆண்டு டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார். அதற்கு நாடெங்கும் ஆதரவு பெருகியது.
அதையடுத்து, அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு, லோக்பால் அமைப்பு உருவாக்கப்படும் என உறுதி அளித்தது. அதைத்தொடர்ந்து அன்னா ஹசாரே தனது போராட்டத்தை வாபஸ் பெற்றார். ஆனால், காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல், கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜகவும் இதுவரை லோக்பால் அமைப்பை அமைக்கவில்லை. இது தொடர்பாக பலமுறை அன்னா ஹசாரே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் எந்த பதிலும் இல்லை.
எனவே, அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று துவங்கியுள்ளார். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.