ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு தனியார் பள்ளி முதல்வர், ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் உள்ள ஒரு தனியார் பள்ளி முதல்வர் ஜெயராஜ் என்பவர், சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னால் 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று அந்த பள்ளி முதல்வர் மிரட்டியதால், பயந்துபோன சிறுமி இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவில்லை.
ஆனால், சிறுமிக்கு மூன்று மாதங்களாக மாதவிடாய் வராததால், சந்தேகம் அடைந்த அவரது தாய், உடனடியாக மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போதுதான் அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனை அடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையில் பள்ளி முதல்வர் ஜெயராஜ் மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், பள்ளி முதல்வர் ஜெயராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்றும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
14 வயது ஒன்பதாம் வகுப்பு மாணவியை பள்ளி முதல்வரே பாலியல் வன்கொடுமை செய்த இந்த விவகாரம், அந்த பகுதியில் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பு மீதான கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.