Publish Date: Wed, 11 Dec 2019 (14:01 IST)
Updated Date: Wed, 11 Dec 2019 (14:04 IST)
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றிய நிலையில் தற்போது மாநிலங்களவையில் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார்.
பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை தரும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.
அதன் படி 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக குடிபெற்ற இந்துக்கள், கிறுஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்ஸி, சீக்கியர்கள் ஆகிய 6 மதத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த சட்டம் குடியுரிமை அளிக்க அனுமதிக்கும். மேலும் இச்சட்டப்படி அகதிகளாக குடியேறும் இந்த 6 மதத்தவர்களும் 6 ஆண்டுகள் இங்கு வசித்திருக்க வேண்டும் என்பது விதியாகும். முன்னதாக விதிப்படி 11 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 5 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மாநிலங்களவையில் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அப்போது பேசிய அவர், “இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர். அவர்களிடம் நான் கேட்க விரும்புவது ஒன்று தான். இந்த மசோதா இந்திய இஸ்லாமியர்களுக்கு எப்படி தொடர்புடையது ஆகும்?, இந்திய இஸ்லாமியர்கள் எப்போதும் இந்திய குடிமகன்களே” என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் அவர், “மோடி அரசு அரசியலமைப்பு சட்டத்தின் படியே செயல்படுகிறது. இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை பற்றி கவலைப்பட வேண்டிய தேவை இல்லை” எனவும் கூறியுள்ளார்.