நாடு முழுவதும் ஹோலி கொண்டாடப்படும் நிலையில் ராஜஸ்தானில் ஹோலி கொண்டாட மறுத்த இளைஞரை 3 பேர் கொண்ட கும்பல் தாக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பல பகுதிகளில் இன்று ஹோலி கொண்டாடப்படும் நிலையில் நேற்று முதலாகவே வட மாநிலங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. அதேசமயம் இந்து - இஸ்லாமிய மோதல்கள் ஏற்படலாம் என்று கருதப்படும் இடங்களில் மசூதிகள் தார்ப்பாயால் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் ராஜஸ்தானின் டௌசா பகுதியில் ஹோலி கொண்டாட மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். ரல்வாஸ் கிராமத்தை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் என்பவர் அப்பகுதியில் உள்ள நூலகத்தில் அரசு போட்டித் தேர்வுகளுக்காக படித்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த அசோக், பப்லூ, கலுராம் என்ற நபர்கள் அங்குள்ளவர்கள் மீது வண்ணப்பொடிகளை பூசி ஹோலி விளையாடியுள்ளனர்.
ஹன்ஸ்ராஜ் மீது பூச வந்தபோது அவர் தடுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் ஹன்ஸ்ராஜை கடுமையாக தாக்கினர். பின்னர் அதில் ஒருவர் ஹன்ஸ்ராஜை கழுத்தை நெரித்துக் கொன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஹன்ஸ்ராஜின் உறவினர்கள் மற்றும் மக்கள், அவரது பிணைத்தை வைத்து சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த ஹன்ஸ்ராஜின் குடும்பத்திற்கு உதவிகள் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். காவல்துறை அளித்த உறுதியின்பேரில் அவர்கள் பிணத்தை அடக்கம் செய்ய எடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K