Publish Date: Sun, 04 Aug 2024 (14:06 IST)
Updated Date: Sun, 04 Aug 2024 (14:12 IST)
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் இருந்து ஆந்திராவின் விசாகப்பட்டினத்துக்கு கோர்பா- விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் இன்று காலை விசாகப்பட்டினம் ரயில் நிலையம் வந்தடைந்தது.
இந்த ரயில் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் 11வது பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது ரயிலின் மூன்று ஏசி பெட்டிகளில் திடீரென தீ பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தன. இதனால் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர்.
தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விசாகப்பட்டினம் ரயில் நிலையம் வந்தடைந்த தீயணைப்பு வீரர்கள் ஏசி பெட்டிகளில் மளமளவென எரிந்த தீயை போராடி அணைத்தனர்.
இந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட போது பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தால் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.