Publish Date: Fri, 27 Jul 2018 (11:14 IST)
Updated Date: Fri, 27 Jul 2018 (11:20 IST)
கர்நாடக முதல்வர் குமாரசாமி, தமிழக ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் என திருப்பதி ஏழுமலையான் சாமியிடம் வேண்டியதாக தெரிவித்துள்ள கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழகத்திற்கு தண்ணீர் தரவே முடியாது என கூறி வந்த கர்நாடகா, அங்கு மழை அதிகளவில் பெய்ததால் உபரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட்டது.
இதுகுறித்து பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, தண்ணீர் வீணாய் கடலில் கலப்பதை தவிர்ப்பதற்காக மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் இதுகுறித்து தமிழக ஆட்சியாளர்களையும், விவசாயிகளையும் சந்தித்து பேசவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, காவிரி விவகாரத்தில் சட்டத்தின் மூலமாகவோ, நீதிமன்றத்தின் மூலமாகவோ தீர்வு காண முடியாது எனவும் இயற்கை ஒத்துழைக்காவிட்டால் தண்ணீர் திறந்துவிட முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும் ஏழுமலையானிடம் தமிழக ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தியை தர வேண்டும் என வேண்டியதாக குமாரசாமி தெரிவித்தார். குமாரசாமியின் இந்த கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
webdunia
Publish Date: Fri, 27 Jul 2018 (11:14 IST)
Updated Date: Fri, 27 Jul 2018 (11:20 IST)