Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீதிமன்ற உத்தரவு ; எடப்பாடிக்கு சாதகமா? பாதகமா?

நீதிமன்ற உத்தரவு ; எடப்பாடிக்கு சாதகமா? பாதகமா?

எம். முருகன்

, புதன், 20 செப்டம்பர் 2017 (15:35 IST)
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததற்கு தடை விதிக்காத நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பை தற்போது நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.


 

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்டனர், கொறடா உத்தரவை மீறி ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர், முதல்வர் மீது ஊழல் புகார் கூறினார்கள் , திமுகவோடு கூட்டு வைத்தனர் என காரணங்களை கூறி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார்.
 
இதுகண்டு அதிர்ச்சியடைந்த தினகரன் தரப்பு, அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, தகுதி நீக்கத்திற்கு எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால், மறு உத்தரவு வரும் வரை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது எனவும், காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக்கூடாது எனவும் தீர்ப்பளித்தார்.

webdunia

 

 

 
நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு எடப்பாடி தரப்பிற்கு நிச்சயம் பின்னடைவுதான். ஏனெனில், எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினால் நிச்சயம் நமக்கே வெற்றி என திட்டமிட்டிருந்தது எடப்பாடி தரப்பு. அதேபோல், தகுதி நீக்கம், தொகுதி காலி என்ற அறிவிப்புகள் தினகரன் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு பயத்தை ஏற்படுத்தி, மீண்டும் தங்கள் அணி பக்கம் இழுத்து வந்து விடும் என கணக்கு போட்டு வைத்திருந்தனர். 
 
ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என நீதிமன்றம் அறிவித்துவிட்டது. அதோடு, தினகரன் தரப்பு வழக்கறிஞரின் திறமையான வாதத்தால், பதிலளிக்க முடியாமல் திணறிய தமிழக அரசு வழக்கறிஞர், அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதன் விளைவாக முதல்வர், கொறாடா, சபாநாயகர் அனைவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தகுதி நீக்கத்திற்கு தடை கிடைத்துவிடும். எனவே,சட்டபையில் நுழைந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க திட்டமிட்டிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு நிச்சயம் இந்த தீர்ப்பு பின்னடைவுதான். ஆனாலும், அவர்கள் 18 தொகுதிகளிலும் தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை என்பதே அவர்களுக்கு ஒரே ஆறுதல்
 
அதேபோல், எடப்பாடி தரப்பிற்கு நீதிமன்ற உத்தரவு ஒரு பக்கம் பின்னடைவு எனினும், இந்த கால இடைவெளியில் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் நிச்சயம் எடப்பாடி தரப்பு ஈடுபடும். அதிலும் வெற்றியும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், தகுதி நீக்கம் செய்யப்பட்டதுமே தினகரன் பக்கம் இருந்த 2 பெண் எம்.எல்.ஏக்கள் உட்பட சிலர் கதறி அழுததாக செய்திகள் வெளிவந்தது. ஆனாலும், நீதிமன்ற உத்தரவு தங்களுக்கு சாதகமாக வரும் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தகுதி நீக்கத்திற்கு தற்போது எந்த தடையையும் நீதிமன்றம் விதிக்கவில்லை.

webdunia

 

 
எனவே, தங்கள் எம்.எல்.ஏக்கள் பதவியை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற முடிவுக்கு வரும் எம்.எல்.ஏக்கள், எடப்பாடி பக்கம் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அப்படி மாறாமல் போனால்தான் எடப்பாடி தரப்பிற்கு பிரச்சனை. ஏனெனில், அக். 4ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் போது, புதிதாக எதையும் தமிழக அரசு எடுத்துரைக்கப்போவதில்லை. எனவே, தீர்ப்பு அவர்களுக்கு பாதகாமாக அமைய வாய்ப்பிருக்கிறது. 
 
ஏனெனில், திமுக பக்கம் கபில் சிபில், தினகரன் பக்கம் துஷ்யந்த் தவே ஆகியோர் திறமையான வாதங்களை தொடுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆவர். அவர்களின் வாதங்களை மீறி தமிழக அரசு வழக்கறிஞரின் வாதம் எடுபடவேண்டும். 
 
இதுபக்கம் ஒரு பக்கம் எனில், இருக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி, தற்போது எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருக்கும் எம்.எல்.ஏக்கள், தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுப்பார்கள். அல்லது வேறு சில கோரிக்கைகளை முன் வைப்பார்கள்.  அது அனைத்தையும் பரிசீலிக்க வேண்டிய நெருக்கடி எடப்பாடிக்கு ஏற்படும். மேலும், அங்கிருந்து யாரும் தினகரன் பக்கம் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

webdunia

 

 
மறுபக்கம் திமுக எப்படியெல்லாம் காய் நகர்த்துகிறது, மு.க.ஸ்டாலின் என்ன திட்டமிடுகிறார் என்பதையெல்லாம் அறிந்து அதற்கேற்றால் போல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
 
நீதிமன்றம் கொடுத்திருக்கும் இந்த 15 நாட்கள், எடப்பாடி பழனிச்சாமி எப்படி செயல்படபோகிறார் என்பதிலேயே அவரின் அரசியல் எதிர்காலம் இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செங்கோட்டையனுடன் டீல் பேசும் டெல்லி - எடப்பாடி, ஓ.பி.எஸ் அதிர்ச்சி