பழி வாங்கும் ஆவி கதை. இந்த கால்வரி கதை அறிமுக இயக்குனர் அறிவழகனின் கச்சிதமான திரைக்கதையில் கலைடாஸ்கோப்பில் போட்ட வளையல் துண்டுபோல் நமக்கு காட்டுவது பல வர்ண ஜாலம்.
முதல் காட்சியிலேயே படத்தின் ஹீரோயின் இறந்து போகிறார். அது கொலையா? தற்கொலையா? தற்கொலை என்று போலீஸ் முடிவுகட்டும்போது அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆதி, அது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கிறார். அந்த மரணத்தின் மீது அவருக்கு ஈடுபாடு தோன்ற காரணம், கொலை செய்யப்பட்டது அவரது முன்னாள் காதலி.விசாரணை எந்த முன்னேற்றமும் இல்லாமல் நகரும்போது, மேலும் சில கொலைகள் அதே அபார்ட்மெண்டில் நடக்கிறது. இந்த கொலைகளுக்கு யார் காரணம்? தும்பை பிடித்துப் போனால் அதன் மறு நுனியில் கிடைப்பதோ நம்ப முடியாத ஆச்சரியம்.படத்தின் நிஜ ஹீரோ, அறிவழகனின் திரைக்கதை. அடுத்தடுத்து கொலை நடப்பதை திகிலுடன் சித்தரிக்கும் போதே, ஆதி சிந்துமேனன் காதலும் உடன் பயணிக்கிறது. இடைவேளைக்குப்பின் ஆதியின் விசாரணையுடன் சிந்துமேனனின் கொலைக்கான காரணமும் சொல்லப்படுகிறது. விசாரணை, காதல், கொலைக்கான காரணம்... படத்தின் முக்கியமான இந்த மூன்று அம்சங்களையும் எந்த உறுத்தலுமில்லாமல் புத்திசாலித்தனமாக இணைத்திருக்கிறார் இயக்குனர்.ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங், கலை நான்கும் அபஸ்வரம் இல்லாமல் இணைந்திருப்பது படத்தின் மற்றொரு அம்சம். ஹாரர் படத்திற்கேற்ற க்ரே நிற க்ரேடிங், படம் நெடுக வரும் மழைக் காட்சிகள், சில் அவுட்டில் தெரியும் உருவங்கள் என தனியான அனுபவத்தை தருகிறது மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு. அதிக பாடல்கள் இல்லாதது ஈரத்தின் ஸ்பெஷல். ஹாரர் படம் என்பதற்காக கண்டபடி இசைக்கருவிகளை ஒலிக்கவிடாததற்காக இசையமைப்பாளர் தமனை பாராட்டலாம்.
நறுக்கி வைத்த மாதிரியான காட்சிகளின் வழி கதை சொல்லப்படுகிறது. லாஜிக் மீறக் கூடாது என்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர். ஆவி பற்றி ஆதி மேற்கொள்ளும் தேடல், ஆவி கதைக்கான நியாயத்தை உருவாக்குகிறது. அதே நேரம் சந்தேக கணவனாக வரும் நந்தா கதாபாத்திரத்தின் செகண்ட்ஹேண்ட் போபியா ஓவர் டோஸ். படத்தில் அனைத்து நடிகர்களையும் அண்டர்ப்ளே செய்ய வைத்திருக்கிறார் இயக்குனர். நந்தாகூட கத்தி ஆர்ப்பாட்டம் செய்யாமல் தனது வில்லத்தனத்தை வெளிப்படுத்துகிறார். சிந்துமேனன் காதலியாகவும், மனைவியாகவும் இருவேறு பரிமாணங்களை காட்டுகிறார். கணவன் சந்தேகப்படும்போது வாடிப் போகும் அவரது முகம் பரிதாபத்தை அள்ளுகிறது.மிடுக்கான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் மிளிர்கிறார் ஆதி. கல்லூரி காலத்திலும் அதே மிடுக்குடன் இருப்பது மட்டும் சின்ன நெருடல். வீட்டைவிட்டு ஓடிவர முடியாது என்று சிந்துமேனன் சொல்லும்போது ஆதி சொல்லும் அடாவடி பதில் கதைக்கு திருப்புமுனையாக அமைந்தாலும், அவரது கதாபாத்திரத்தின் தன்மையை பாதிக்கிறது.அபார்ட்மெண்டில் இயல்பாக நடக்கும் செக்ஸ் குற்றங்கள் எப்படி ஒன்றிணைந்து பெரும் க்ரைமாக மாறுகிறது என்பது சற்றே திடுக்கிட வைக்கிறது. அசம்பாவிதம் நிகழும்போது காட்டப்படும் சிவப்பு நிறமும், ஆவியின் மீடியமான தண்ணீரும் ஆதியை போலவே நம்மையும் பதற்றப்படுத்துவது இயக்குனரின் வெற்றி. கச்சிதமான திரைக்கதையும், காட்சியமைப்பும் இருந்தால் எந்த கதையையும் ரசிக்க வைக்கலாம் என்பதற்கு ஈரம் சிறந்த எடுத்துக்காட்டு. சின்னச் சின்ன நெருடல்களை களைந்தால், ஈரம் பெர்ஃபக்ட் த்ரில்லர்.