சில பல வருடங்களுக்கு முன் மோசர் பேருடன் இணைந்து பெருமையுடன் பிரகாஷ்ராஜ் தயாரித்து, பாதியில் அவர் பிய்த்துக் கொண்டு ஓடியதால் பெட்டிக்குள் முடங்கிய மயிலு கடைசியாக தோகை விரிக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
இந்தப் படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் ஜீவன். படம் பற்றிய அவரது பேச்சில் ஜீவனே இல்லை. எப்படி இருக்கும்?
முதல் படம் முடிந்து இத்தனை வருடங்கள் பெட்டிக்குள் கிடந்தால் பெருமூச்சுதான் வரும். இந்தப் படம் இயக்கிய பிறகு பா.விஜய்யை வைத்து ஞாபகங்கள் என்ற படத்தை இயக்கினார். இரண்டாவது படமே அப்படி என்றால் முதல் படம் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறோம்.
மோசர் பேர் ஒருவழியாக தூக்கம் விட்டெழுந்து மயிலுவை நாளை வெளியிடுகிறது. இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். படம் எவ்வளவு டிலே என்றால், இதில் நடித்த ஷம்மு ஒன்றிரண்டு படங்களில் நடித்து பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே - அமெரிக்கா - செட்டிலாகிவிட்டார்.
அனல் அரசு ஆக்ஷன் காட்சிகள் அமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.