Publish Date: Wed, 28 Apr 2010 (20:31 IST)
Updated Date: Wed, 28 Apr 2010 (20:28 IST)
நடிகர் விஜய்யின் 50வது படம் சுறா. விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த காதலுக்கு மரியாதை படத்தை தயாரித்த சங்கிலி முருகன் 11 வருட இடைவெளிக்குப் பிறகு - அதாவது காதலுக்கு மரியாதைக்குப் பிறகு தயாரித்திருக்கும் படம் இது.
அழகர்மலை படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜகுமார் சுறாவை இயக்கியிருக்கிறார். 2007ல் மலையாளத்தில் வெளியான அன்வர் ரஷீதின் சோட்டா மும்பை படத்தின் கதையை மேலோட்டமாக தழுவி சுறாவை எடுத்துள்ளனர். இதில் ஹீரோவாக நடித்தவர் மோகன்லால்.காதலிக்காகவும், தங்கைக்காகவும் சண்டை போட்ட நான் இதில் ஊர் மக்களுக்காக சண்டை போட்டிருக்கிறேன் என்று சுறா பற்றி கூறுகிறார் விஜய். இவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் தமன்னா. மீனவ இளைஞனாக வரும் விஜய்யின் நண்பன் அம்ப்ரல்லாவாக வடிவேலு நடித்துள்ளார். இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் திரையரங்கை கலகலப்பாக்கும் என்றார் இயக்குனர். இவர்களுடன் ஸ்ரீமன், ரியாஸ்கான, தேவ் கில் ஆகியோரும் நடித்துள்ளனர்.சமாதானமாகப் போக நான் புறா இல்லடா... சுறா. விஜய் பேசும் பன்ச் வசனங்களில் இதுவும் ஒன்று. கொச்சி, தூத்துக்குடி, கடலூர் போன்ற கடலோரப் பகுதிகளில் படத்தை எடுத்துள்ளனர். மணிசர்மா இசையமைத்துள்ளார். அனைத்துப் பாடல்களும் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. எம்.எஸ்.பிரபு, ஏகாம்பரம் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கனல் கண்ணன் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார்.சங்கிலி முருகனின் முருகன் சினி ஆர்ட்ஸ் தயாரித்திருக்கும் சுறாவின் ஒட்டுமொத்த விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் இப்படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.