Publish Date: Fri, 24 May 2019 (09:12 IST)
Updated Date: Fri, 24 May 2019 (09:13 IST)
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வட மாநிலங்களில் மிக மோசமான தோல்வியை அடைந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தேசிய அளவில் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் தனியாக வெறும் 50 தொகுதிகளையேக் கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது.
காங்கிரஸின் இந்த மிகப்பெரிய தோல்விக்கு மிக முக்கியமானக் காரணம் வெற்றியை நிர்ணயிக்கும் வட மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக தனது பலத்தை இழந்துள்ளதுதான் . கிட்டதட்ட 17 மாநிலங்களில் உள்ள 190 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் ஒரு தொகுதியைக் கூட பெறவில்லை. பஞ்சாப் மட்டுமே வடமாநிலங்களில் விதிவிலக்காக காங்கிரஸ்க்குக் கைகொடுத்துள்ளது.
இதன் மூலம் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் காங்கிரஸ் மிக மோசமான தோல்வியை அடைந்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் தேசியக் கட்சியாக தனது அதிகாரத்தை முழுவதுமாக இழந்துவிட்டதா என்ற எண்ணம் எழுந்துள்ளது. வடக்கை முழுவதுமாக இழந்துள்ள காங்கிரஸுக்கு தெற்கில் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஆறுதல் அளிக்கும் விதமாக வெற்றி கிடைத்துள்ளது. கிட்டதட்ட நாடு முழுவதும் தனது பலத்தை இழந்துவிட்டு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் முன்னால் அடுத்து என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.