Publish Date: Sat, 23 Mar 2019 (14:51 IST)
Updated Date: Sat, 23 Mar 2019 (15:00 IST)
சிதம்பரத்தில் விசிக - காங்கிரஸிடையே ஏற்பட்ட தகராறில் காங்கிரஸ் பாதியிலேயே வெளிநடப்பு செய்தது.
தேர்தல் நெருங்குவதால் திமுக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தனித் தொகுதியில் போட்டியிடுகின்றன. சிதம்பரத்தில் திருமாவளவனும் விழுப்புரத்தில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர்.
இதற்கிடையே சிதம்பரத்தில் விசிக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்குபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என கூறி காங்கிரஸ் கட்சியினர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் வெளியேறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் நேற்று தென்காசியில் அதிமுகவினர் பஞ்சாயத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.