Publish Date: Thu, 21 Mar 2024 (14:21 IST)
Updated Date: Thu, 21 Mar 2024 (14:24 IST)
மக்களவை தேர்தலில் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க பாஜக முன்வந்துள்ள நிலையில், தனது ஆதரவாளருடன் ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள், அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
3 தொகுதிகள் ஒதுக்க வேண்டுமென பாஜகவிடம் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். ஆனால் பா.ஜனதா ஒரு தொகுதி மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளதாகவும், ஓபிஎஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் காலை 10 மணி முதல் ஆலோசனை நடத்தினார். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பாஜகவிடம் மூன்று தொகுதிகள் கேட்டு பெற வேண்டும் எனவும் தாமரை சின்னத்தில் போட்டியிடக் கூடாது எனவும் ஆதரவாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.