Publish Date: Thu, 28 Mar 2019 (20:03 IST)
Updated Date: Thu, 28 Mar 2019 (20:05 IST)
கமல் கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய குமரவேல், அக்கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், கமல் கட்சியில் மூன்று பேர் அதிகாரமிக்கவர்களாக உள்ளதாகவும், அவர்கள் எடுப்பதே முடிவு என்றும், எந்த முடிவும் யாருடனும் கலந்து ஆலோசித்து எடுப்பதில்லை என்றும் முடிவெடுத்தவுடன் எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் வரும் என்றும் கூறினார்.
மேலும் கமலிடம் அகந்தையோ, அதிகார நோக்கமோ இல்லை என்றாலும் அவர் ஒரு குறிப்பிட்ட வளையத்திற்குள் மட்டுமே இருப்பதால் இந்த கட்சியை அவரையும் மீறி ஒரு அதிகார வர்க்கம் நடத்துவது போல் தெரிகிறது. நான் போட்டியிடுகிறேன் என்று கூறியதும், அனைத்து வேலையையும் கவனியுங்கள் என்று கமல் சொன்னதால்தான் நான் தேர்தல் பணிகளை தொடங்கினேன். ஆனால் அதையே காரணம் காட்டி என்னை கட்சியில் இருந்து நீக்க முடிவெடுத்தனர். கட்சிக்குள் இருக்கும் எனக்கே நீதி கிடைக்காதபோது மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்.
மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள் நன்றாக இருந்தாலும், அந்த கொள்கைகளை முறைப்படி செயல்படுத்த அங்கு ஆளில்லை என்று குமரவேல் கூறினார்