Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாரதிதாசனின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் - ஒரு வாசிப்பு

க. பூரணச்சந்திரன்

பாரதிதாசனின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் - ஒரு வாசிப்பு
, புதன், 8 ஏப்ரல் 2009 (15:43 IST)
webdunia photoWD
[பாரதிதாசனின் கவிதைகளில் சிறந்தது என்று கருதப்படும் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற நெடுங்கவிதையை பல்வேறு அர்த்த அலகுகளாக பிரித்து, 'தமிழ் கூறும் நல்லுலகு' இதுகாறும் இந்தக் கவிதை தமிழுக்கு வழங்கியதாகக் கூறிவந்த மதிப்பீடுகளை தகர்க்க முயல்கிறார் பேராசிரியர் க.பூரணசந்திரன். ஒரு கவிதைக்கு இது போன்ற மிக நீண்ட விமர்சன வாசிப்பை பல்வேறு அர்த்த நோக்குகளுடனும், குறிப்பீடுகளுடனும் அளிப்பது மிகவும் அரிதான ஒரு முயற்சி. இந்தக் கட்டுரை மிக நீளமானது என்பதால் இதனை பகுத்து தொடர்ந்து வெளியிடவுள்ளோம். தற்போது இந்த முதல் பகுதியை வெளியிடுகிறோம்.]

பாரதிதாசனை அறியாத இலக்கிய ஆர்வலர்கள் இருக்க முடியாது.
பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப்போன சொத்துகள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், கனகசுப்புரத்தினம் என்ற பாரதிதாசன் என்று சொல்லவேண்டும் என்று சொல்கிறார் புதுமைப்பித்தன்.
பாரதிதாசன், முதன்முதலில் படைத்த தொடர்நிலைச் செய்யுள் (சிறிய காவியம்) சஞ்சீவி பர்வதத்தின் சாரல் இது பஃறொடை வெண்பாவினால் அமைந்தது. பல சீர்திருத்தக் கருத்துகளைச் சொல்லும் பாங்கில் ஒரு கதையைச் சொல்வதாக அமைந்தது.

ஓர் அழகிய சூழலில் கதை நிகழ்கிறது. அந்த இயற்கைச்சூழல் ஒரு மலைச்சாரல். சஞ்சீவி பர்வதம் என்பது அம்மலையின் பெயர்.
குப்பன் என்ற இளைஞன் ஒருவன் தன் காதலி வஞ்சி என்பவள் வரவுக்காகக் காத்திருக்கிறான். அவளும் வருகிறாள். மனமகிழ்ந்து அவளை முத்தமிடச் செல்கையில் மறுக்கிறாள் அவள். காரணம் கேட்கிறான் குப்பன். முன்நாள் சொன்னபடி குப்பன் அந்த மலையிலிருக் கும் இரண்டு மூலிகைகளைப் பறித்துத் தரவேண்டும் என்கிறாள் வஞ்சி. இல்லையென்றால் என் உயிர் இருக்காதுஎன்று மிரட்டுகிறாள். நீ கல்லில் நடந்தால் கால்கடுக்கும், மற்றும் கொடிய விலங்குகளால் ஆபத்து ஏற்படும் என்கிறான் குப்பன். வாழ்வில் எங்கும் உள்ளது தான், வாருங்கள்என்கிறாள் வஞ்சி.

இம்மூலிகைகள் அசாதாரணமானவை. ஒன்றைத் தின்றால், உலகின் மாந்தர்கள் அனைவரும் பேசும் பேச்சையெல்லாம் கேட்கலாம். மற்றொன்றைத் தின்றால், இவ்வுலகில் நடக்கும் நிகழ்ச் சிகளையெல்லாம் பார்க்கலாம். ஆதலால் மூலிகையின் ஆசையை விடு என்கிறான் குப்பன். கேட்கும் வஞ்சிக்கோ இன்னும் அதிகமாக ஆசை மூள்கிறது.

கோபமுற்ற குப்பன், என்னடி பெண்ணே, இது தகுமோ பெண்களுக்கு? என்கிறான். வஞ்சி, பெண்ணை அடிமையாக நினைத்தீரோ? என்கிறாள். நான் தனியாகவே பர்வதம் செல்வேன். இல்லையென்றால் உயிரைவிடுவேன் என்று மீண்டும் மிரட்டுகிறாள். அவள் கோபத்திற்கு பயந்த குப்பன் அவளைத் தூக்கிக்கொண்டு மலைமீது செல்கிறான். மூலிகைகளைக் கண்டு பறித்துத் தருகிறான்.

இருவரும் முதலில் கேட்கும் மூலிகையைத் தின்கின்றனர். பிரெஞ்சு நாட்டில் எங்கோ ஒரு உணவுவிடுதியில் நிகழும் ஓர் உரையாடல் அவர்களுக்குக் கேட்கிறது. ஓர் இத்தாலி நாட்டவனுக்கும் பிரெஞ்சுக்காரனுக்கும் இடையில் நிகழ்வது அது. உரையாடல் சூழலிலிருந்து அந்த இத்தாலிக்காரன் தன் எதிரில் ஒரு கருப்பன் உட்கார்ந்திருப்பதைச் சகிக்கவில்லை என்று தெரிகிறது. அவனுக்கு புத்திசொல்லும் ஃபிரெஞ்சுக்காரன், 'எங்கள் பிராஞ்சியர்கள் இப் பேதம் பாராட்டித் தங்கள் பழங்கீர்த்தி தாழ்வடைய ஒப்பார்கள்; பேதபுத்தி சற்றும் பிடிக்காது போ,போ,போ! பேதம் கொண்டோர்க்குப் பிராஞ்சில் இடம் இல்லை' என்கிறான். குப்பனும் வஞ்சியும் பிரெஞ்சுக்காரருக்கு வாழ்த்துரைக்கின்றனர். பிறகு நல்ல அமெரிக்கன், பொல்லா அமெரிக்கன் என்று அமெரிக்கர்களை இருவகையாகப் பாகுபடுத்தி ஒரு அமெரிக்கன் பேசுவதைக் கேட்கிறார்கள். அவனையும் வாழ்த்தி, பிறகு இங்கிலாந்து தேசத்திலிருந்து எவனோ பேசுவதைக் கேட்கின்றனர்.

இந்தியாவில் முப்பதுகோடிப் பேர் வாழ்கிறார்கள் என்றால், அவர்களிடையே உள்ள பேதங்களும் அவ்வளவு இருக்கும்; அவற்றை வளர்க்க, புராணங்கள், இதிகாசங்கள் வேறு இருக்கின்றன; சாதிப்பாகுபாடுகள் வேறு. எனவே அங்குள்ள மாந்தர் கல்லாய்க் கிடக்கிறார்கள். கொள்கைப் பிடிப்பு கொள்வோரையும் வேரறுக்க சாக்குருவி வேதாந்தம் வேறு இருக்கவே இருக்கி றது; எனவே நாவலந்தீவு நம்மைவிட்டுப் போகாது என்கிறான் ஆங்கிலேயன்.

இருவரும் தம் சொந்த நாட்டு நிலைக்குத் துயருறுகின்றனர்.


சொந்த நாட்டில் நடக்கின்ற பேச்சில் என் கவனம் செல்கிறது என்கிறான் குப்பன். ஆனால் அந்நியர்கள் பேசுவதில் கவனம் செலுத்துங்கள், என்கையில் கன்னத்தை மாத்திரம் கொடுங்கள் என்கிறாள் வஞ்சி. இருவரும் முத்தமிடப் போகையில், சொந்த நாட்டுக்குரல் ஒன்று காதில் விழுகிறது. சஞ்சீவி பர்வதத்தை ஒருநொடியில் கொண்டுவர வேண்டுமா ஐயாவே? என்ற குரல். அதைக் கேட்டுக் குப்பன் அஞ்சுகிறான். சஞ்சீவி மலையைப் பெயர்க்கின்ற ஆட் கள் யாரும் பிறக்கவில்லை இன்னும் என்று அவனைத் தேற்றுகிறாள் வஞ்சி.

மேலும் உரையாடல் காதில் விழுகிறது: உங்களுக்குத்தான் வானம்வரை வளரும் உடல் உண்டே; உடனே சஞ்சீவி மலையை எடுத்து வருக என்கிறது அக்குரல். இதைக்கேட்டுக் குப்பன் இன்னும் அஞ்சுகிறான். அந்த மனிதன் வந்து மலையைத் தூக்குவதற்குள் நாம் இறங்கிச் சாரல் சென்று விடுவோம் வா என்கிறான். மலையைத் த£க்கும் ஆற்றலிருந்தால் நாம் ஏன் அடிமையாய் மிடிமையில் வாழ்கிறோம்?என்று வஞ்சி தன் பதிலை முடிப்பதற்குள், அந்த மலையை இதோ தூக்கிவந்து உம் எதிரில் வைக்கிறேன் ஐயா என்ற குரல் கேட்கிறது.

இதைக்கேட்ட குப்பனின் நிலை இரங்கத்தக்கதாகிவிடுகிறது. ஐயோ வஞ்சி, சாவு வந்ததே! மூலிகையைக் கொணர வம்பு புரிந்தாயே! முத்தம் கொடுத்தே முழுநேரமும் தொலைத்தாயே! என் உயிரையும் தொலைத்தாய், உன் உயிரையும் இழக்கப்போகிறாய் என்று புலம்புகிறான்.
வஞ்சி நகைக்கிறாள். அவளுக்கு இது எவனோ ஒரு பாகவதன் சொல்லும் கதை என்பது புரிந்துவிட்டது. ஆனால் குப்பனோ உண்மையான உரையாடல் என்றே இதைக் கருதுகிறான். மலையைத் தூக்கும் மாமனிதன் எவனும் இல்லை, காதல் நிசம்; இக்கனி முத்தம் மிக்க உண்மை என்றெல்லாம் தேற்றும் வஞ்சியின் சொல்லையும் ஏற்கமறுக்கிறான்.

இந்நேரம் போயிருப்பார்; இதோ சத்தம் கேட்கிறது; வானத்தில் பாய்கிறார் என்றெல்லாம் மீண்டும் குரல்கள் கேட்கின்றன. குப்பன் இப்போது பேசும் ஆற்றலையும் இழந்துவிட்டான். ஐயோ என்று மட்டுமே அவனால் சொல்லமுடிகிறது. இனிமேல் காதில் விழுவதையும் கேளுங்கள் என்கிறாள் வஞ்சி. இப்படியாக அநுமார் எழும்பிப்போய் சஞ்சீவி மலையைக் கொண்டுவந்து இலங்கையில் வைத்தார். அதன் சக்தியால் இராமனும் இலட்சுமணனும் எழுந்தார்கள் என்கிறது குரல். இலங்கையில் வைத்துவிட்டானே, நாம் தப்பப்போவதில்லை என்கிறான் குப்பன். அநுமார் மீண்டும் சஞ்சீவி பர்வதத்தைக் கொண்டுசென்று இருந்த இடத்திலேயே வைத்துவிட்டார் என்கிறது குரல்.

குப்பன் இப்போது நகைக்கிறான். நான் அப்போதே ஆபத்து இருக்காதென்று நினைத்தேன். நான் நினைத்தபடியே நடந்தது பார், அதுதான் ஆச்சரியம் என்கிறான். வஞ்சி அவனிடம் நடந்த செய்தி என்ன, அதைக் கூறுங்கள் என்கிறாள். 'நாம் இங்கே வந்தோம், நாம் இங்கே இருக்கும்போதே அநுமார் இந்த மலையைத் தூக்கிச் சென்று இலங்கையில் வைத்தது, பிறகு இராமன் எழுந்ததும் இங்கேயே மலையைக் கொண்டுவந்து வைத்துவிட்டது. மலையைச் சற்றேனும் குலுங்காமல் கொண்டு சென்றதும் வைத்ததும் ஆச்சரியம் என்கிறான்.

இங்கே கதையை இன்று நிறுத்துகிறேன். இந்தக் கதையைக் கேட்டவர்கள் எல்லாரும் இம்மை மறுமைப் பயன்களை அடைவார்கள் என்று ராம பஜனை செய்து கதையை முடிக்கும் பாகவதன் குரல் மீண்டும் காதில் விழுகிறது. இதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை குப்பனால். வஞ்சி, காட்சி மூலிகையை அவனிடம் கொடுத்து ஐயா, இதை விழுங்கி அங்கே பாருங்கள் என்கிறாள். ஒரு பாகவதன் உட்கார்ந்து தனக்குக் கிடைத்த காசுகளைத் தட்டிப்பார்ப்பது தெரிகிறது. சிரிக்கிறார்கள் இருவரும். மூடப்பழக்கவழக்கங்கள் பற்றி நீண்டதொரு உரையாற்றுகிறாள் வஞ்சி. செம்மை முத்தம் கொள்ளவில்லை, சேர்த்து முத்தம் கொள்வீரே என்று முடிக்கிறாள்.

இன்றுதான் இத்தகைய நலிவுதரும் கதைகளெல்லாம் நாட்டிலிருப்பதைத் தெரிந்துகொண்டேன். மூடப்பழக்கம், முடிவற்ற கண்ணுறக்கம் ஒழிவதென்றோ?என்று அறிவுபெற்ற குப்பன் உரைக்கிறான். என் நெஞ்சை உன் நெஞ்சம் ஆக்கிப்பார் என்று கேட்கிறான்.

உடல்சிலிர்த்த வஞ்சி, காதலுக்குத் தக்க இடம் சாரல்தான், அங்குச் செல்வோம் வாருங்கள் என்று குப்பனை அழைக்க, காதலர்கள் சாரல் செல்கிறார்கள். சாரலின் இயற்கையழகு, கவிதையின் தொடக்க அடிகளில் சொல்லப்பட்டவாறே மீண்டும் வருகிறது, வஞ்சியின் வார்த்தைகளில். இன்பமும் நாமும் இனி என்று வஞ்சி சொல்வதுடன் கவிதை முடிகிறது.
இக்கவிதைப் பிரதி, பல அறிஞர்களாலும் பாராட்டப்பட்ட ஒன்று. அவர்களது கருத்துகள் சிலவற்றைக் காண்பது நல்லது.

இப்பாடல் அகநிலைச் செய்யுள் வகையைச் சார்ந்ததாகும். குப்பன் வஞ்சி ஆகியோர் காதல் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அக்காதல் வாழ்க்கையில் சீர்திருத்தக் கருத்துகளைச் சொல்வதுதான் இப்பாடலின் சிறப்பாகும். அகஇலக்கணத்தின்படி முதல், கரு, உரிப் பொருள்களில் அமைந்துள்ளது என்கிறார் சி.கே. சீனிவாசன்.

சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்பது பாரதியின் குயில் பாணியில் எழுதப்பட்டிருக்கிறது. சில இடங்களில் அழகாக இருக்கிறது என்கிறார் கு.ப. ராஜகோபாலன். குயில் பாட்டுப்பாணி என்று அடையாளம் காண்பதில் இது ஒரு அதீத நவிற்சிக் கதை என இனம்காணப்படுகிறது.
கு,ப. ரா.வின் கருத்தினை ஒத்த ஒன்றினை நாவலாசிரியர் ஹெப்சிபா ஜேசுதாசனும் வெளியிட்டுள்ளார்.

சஞ்சீவிபர்வதத்தின் சாரல் கவிஞரின் கவிதைகளுள் முதல் ஸ்தானத்தை எளிதில் பிடித்துக் கொண்டிருக்கிறது. இது பாரதியாரின் குயில்பாட்டின் சாயல் கொண்டுள்ளது. ஆனால் குயில் பாட்டின் உட்கரு Ôகாதல்போயின் சாதலÕ என்பதல்லவா? பாரதிதாசனின் உட்கருவோ முழுக்க முழுக்க ஆரியதிராவிட வேறுபாடாகும் என்பது அவர் கூற்று.

சஞ்சீவிபர்வதத்தின் சாரல் கவிதையின் கருப்பொருள் (theme) வெவ்வேறு நிலைகளில் கணிக்கப்பட்டுள்ளது. பெண்ணுரிமை, சமதர்மம், ஆரியதிராவிட வேறுபாடு என்பன சுட்டிக்காட்டப் பட்ட கருப்பொருள்களில் சில.


பாரதிதாசனின் சிறப்புவாய்ந்த அங்கதப் பாடலே சஞ்சீவிபர்வதத்தின் சாரல். மற்றொன்று இருண்டவீடு என்று இதை அங்கதப் பாட்டாகக் கண்டுள்ளார் ச.சு. இளங்கோ. இது ஒரு அதீதப் புனைவா, அங்கதமா என்பதுபோன்று விவாதங்கள் இருந்தாலும், கருப் பொருள்கள் வெவ்வேறாகச் சொல்லப்பட்டாலும், பாரதிதாசனின் கவிதைகளில் முதன்மை பெறுவது சஞ்சீவிபர்வதத்தின் சாரல் என்பதில் எவருக்கும் கருத்துவேறுபாடில்லை.
இனி சஞ்சீவிபர்வதத்தின் சாரல் கவிதைக்கு ஒரு நவீன விளக்கத்தை இக்கட்டுரையில் முயற்சி செய்து பார்ப்போம்.

அர்த்த அலகு 1 - சஞ்சீவிபர்வதத்தின் சாரல் (தலைப்பு)
இந்தத் தலைப்புத்தொடரே பல சிக்கல்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது. இதுதான் கதையின் செயற்களமாக அமையப்போகிறது என எதிர்பார்க்கத் தொடங்குகிறோம். எனவே இது ஒரு சஸ்பென்ஸ் உருவாக்கும் தலைப்பு.
ஏன் இந்தத் தலைப்பை அளித்தார் பாரதிதாசன்? பாரதிதாசன் கூடியவரை தமிழ்ச்சொற்களை மட்டுமே பயன்படுத்துபவர். அவ்வாறிருக்க சஞ்சீவி பர்வதம் என்னும் இரு சமஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்தக் காரணம் என்ன?
இச்சொற்றொடரை சஞ்சீவி பர்வதம்+அத்து+இன்+சாரல் என்றும் பிரிக்கலாம். அத்து என்பது சாரியை (சொற்கள் சேரும்போது இடையில் வரும் துணையலி). இவ்வாறு பிரித்தால் இனி மையான சாரல் என்று பொருள்படும். இம்மலைச்சாரலில் இனிமை தவழ்வதாக, இனிய செயல்கள் நிகழ்வதாகவே பாரதிதாசன் குறிப்பிடுகிறார்.

இது ஒரு கலாச்சார, புராணிகச் சங்கேதம். ஆனால் கம்பராமாயணத்தில் இச்சொல் ஆளப்படவில்லை. அதில் மருந்துமலை என்றே குறிக்கப்படுகிறது. ஆனால் பௌராணிக மரபில், கதை கூறும்போது சஞ்சீவி பர்வதம் என்றே சொல்லப்படும். எனவே பொதுவாசகர்களுக்கு இச்சொல் மிகவும் பழக்கமானது.
சஞ்சீவி என்ற சொல், சம்+ஜீவி எனப்பகுப்புப் பெறும். சம்-செம்மையான, செம்மைசெய்யப் பட்ட, திருத்தமான என்ற அர்த்தங்களை உடையது. ஜீவி என்பதற்கு உயிர்வாழ்வது, உயிர்க ளை வாழவைப்பது என்ற அர்த்தங்கள் உள்ளன. எனவே இம்மலை தானும் செம்மையாக அமைந்து, பிறரையும் செம்மையாக வாழவைப்பது என்ற குறிப்பின்பேரில் பாரதிதாசன் இப் பெயரை அளித்திருக்கலாம்.

சஞ்சீவி, பர்வதம் ஆகிய இருசொற்களும் சமஸ்கிருதமொழியைச் சேர்ந்த கட்டிலா உருபன்கள்.அத்து, இன் இரண்டும் தமிழின் கட்டுருபன்கள் (இலக்கண அமைப்புக்கு உதவுபவை). இந்த அமைப்பை நோக்கும்போது, தமிழ் உட்பட ஏனை இந்தியமொழிகளுக்கும், சமஸ்கிருதம் சொற்களை (கட்டற்ற உருபன்களை) மட்டுமே வழங்கியுள்ளது, சமஸ்கிருதத்திற்கும் முந்திய தமிழ்தான் இலக்கண அமைப்பினை இந்திய மொழிகளுக்கு வழங்கியுள்ளது என்ற உண்மை குறிப் பினாற் புலப்படுகிறது. ஆரியமொழியான சமஸ்கிருதம் வருமுன்பே தமிழ் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருந்தது என்பதற்கு பிராஹ்மி போன்ற (இன்றைய பாகிஸ் தானிலுள்ள) வடநாட்டு மொழிகளும் சான்று. சிந்தி முதலிய மொழிகளிலும் தமிழ்போன்ற ஒட்டுநிலை அமைப்பே காணப்படுகின்றது என மொழியியலாளர் குறித்துள்ளனர்.

இராமாயணக் கதையில் ஜாம்பவானின் குறிப்பின்பேரில் அனுமன் பறந்துசென்று, கைலாயம், மேரு, நீலம் முதலிய பல்வேறு மலைகளையும் தாண்டி, இம்மருந்துமலைக்கு முன்னதாக உத்தரகுரு நாட்டையும் கடந்து இதனை அடைகிறான். இதில் நான்கு மூலிகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றால் இராமனைச் சேர்ந்த அனைவரும் உயிர்பெற்றெழுவது மட்டுமன்றி, உடல்வலிமையும் பெறுகின்றனர். பின்னர் அனுமன் அம்மலையை இருந்த இடத்திலேயே வைத்து மீண்டதாகச் சொல்லப்படுகிறது.

(சஞ்சீவி) பர்வதம் என்ற திண்மையான மலைப்பகுதி, சாரல் என்ற இனியபகுதி இரண்டும் இச்சொற்களில் குறிக்கப்படுகின்றன. பர்வதம் என்பது கல்போன்ற வலிமையுடைய குப்பனையும் (வஞ்சியை மலைக்குத் த£க்கிக்கொண்டே செல்கிறான், குப்பன்) சாரல் என்பது இனிய வஞ்சியையும் குறிப்பனவாகவும் உள்ளன. மேலும் மலை என்பது வறண்ட கல்லையும், சாரல் என்பது வளமான மரங்களடர்ந்த தாழ்பகுதியையும் குறிப்பவை. இக்கவிதையில் குப்பன் அறிவுவளமற்றவனாகத்தான் காணப்படுகிறான். வஞ்சிதான் அறிவுள்ளவளாக இருக்கிறாள். மேலும் சாரல்தான் இனிமை துய்க்கும் இடம். ஆகவே வஞ்சியைச் சாரலாகக் கற்பனை செய்வது பொருத்தமாகவே உள்ளது. இவற்றை இணைத்து நோக்கும்போது

குப்பன்-மலை-கல்-வலிமை-அறிவுவளமின்மை
சாரல்-தாழ்நிலம்-வளமான பகுதி-மென்மை, இனிமை-அறிவு

என்று துருவ முரண்கள் அமைகின்றன.

நான்கு மூலிகைகள் சஞ்சீவிபர்வதத்தில் இருப்பதாகக் கம்பர் குறித்திருக்க, பாரதிதாசன் இரண்டு மூலிகைகளை மட்டும் குறித்தது ஏன் என்பதும் ஒரு கேள்வி. பாரதிதாசன் கம்பரை அறியாதவர் அல்லர். கம்பர் கூறியவை நான்கு மூலிகைகள் என்றாலும் அவற்றில் இரண்டின் பண்புகளை மட்டுமே அவர் குறித்துள்ளார் (உயிர்பெற்றெழுதல், வலிமை பெறுதல்). பாரதிதாசன் மீதமுள்ள இரண்டின் பண்புகளைக் குறிக்கிறார் என்று கொள்ளலாம் (இருந்த இடத்தி லிருந்தே உலக நடப்புகளைக் கேட்டல், பார்த்தல்).

இவ்வாறு தலைப்பு என்னும் முதல் அர்த்த அலகுப்பகுதி அமைகிறது.

அடு‌த்த தொட‌ரி‌ல் ச‌ந்‌தி‌ப்போ‌ம்...



Share this Story:

Follow Webdunia tamil