Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுந்தர ராமசாமி - ஓர் எதிர்ப்புக் குரல்

சுந்தர ராமசாமி - ஓர் எதிர்ப்புக் குரல்

Webdunia

ஜே ஜே சில குறிப்புகள் என்ற இருத்தலியல்வாத நாவலை ஒரு எழுத்தாளனின், சிந்தனையாளனின், அறிவு ஜீவியின் வாழ்க்கைப் போக்கை சித்தரி ப்பதாக அமைந்த சக்தி வாய்ந்த நாவல் மூலம் நவீன தமிழ் படைப்புலகிலும் இலக்கியத்தில் சாதிக்க துடித்துக் கொண்டிருக்கும் இளம் எழுத்தாளர்களுக்கும் பலமான அடித்தளமிட்ட படைப்பிலக்கிய வாதியான சுந்தர ராமசாமி இன்றைய தினம் நம்மிடையே இல்லை.

தனது 20ஆவது வயதில் மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப்பிள்ளையின் தோட்டி மகன் நாவலை தமிழில் ஆக்கம் செய்ததன் மூலம் தமிழக இலக்கியவாதிகளின் கவனத்தை ஈர்த்த இவர் எழுத்து என்ற சிறுபத்திரிகையில் தனது முதல் கவிதையை எழுதினார். முதல் சிறுகதையை புதுமைப்பித்தன் நினைவு மலரில் வெளியிட்டார் அவரது முதல் சிறுகதை முதலும் முடிவும் என்ற சிறுகதையாகும்.

இவரது சிந்தனை வீச்சுகள் காந்தி, பெரியார் , ஸ்ரீ அரபிந்தோ, ஜே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது தாக்கம் பெற்றது. ஆனால் குறிப்பாக இவர் மார்க்சீய தத்துவத்தை பெரிதும் நம்பியவராக இருந்தார். எம் என் ராய், லெனின் ஆகியோரது அரசியல் தத்துவங்களில் ஆழ்ந்த வாசிப்பும் நம்பிக்கையும் கொண்டவர் சுந்தர ராமசாமி. மலையாளத்தின் இலக்கிய மேதையான எம் கோவிந்தனை இவர் 1957ஆம் ஆண்டு சந்திக்கிறார் தற்போது வரை இவர்கள் நட்பு நீடித்து வந்தது. ஆனால் அதற்கு முன்பே 1952ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் தலைவர் தொ.மு.சி. ரகுனாதனை சந்திக்கிறார், மார்கிஸிய தத்துவங்களால் ஈர்க்கபட்ட இவர் ரகுனாதனின் சாந்தி என்ற இலக்கிய சிறுபத்திரிகை, மற்றும் இன்னொரு கம்யூனிஸ்டான விஜயபாஸ்கரன் என்பவரது சர°வதி பத்திரிகை ஆசிரியர் குழுவில் இருந்ததும் இலக்கிய எழுத்து வாழ்க்கையை தீர்மானித்ததாக கூறலாம்.

1966 ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது ஒரு புளிய மரத்தின் கதை என்ற நாவல், வடிவம் உள்ளடக்கம் ஆகியவற்றில் புதிய எல்லைகளை எட்டியது, இதன் மூலம் தமிழ் நாவலின் எல்லைகள் விரிவடைந்தன, வெகுஜன அரசியல், வணிகக் கலாச்சாரம் குறித்த, இவைகள் அழிக்கும் சிறு கலாச்சாரங்கள், இவைகள் அழிக்கும் வளமையான மரபுகள் என்று அவருடைய சமூக, இலக்கிய அக்கரைகளில் புதிய தரிசனங்கள் உருவாகின. புளியமரம் என்பதும், அதனடியில் கதை சொல்லும் தாமோதர ஆசான் என்ற கதாபாத்திரமும் மரபு, கலச்சாரம் ஆகியவற்றின் குறியீடாக சித்தரிக்கப்பட்டது.

கதை, கட்டுரைகள், கவிதைகள், விமர்சனம் என்று செயல் பூர்வமான இலக்கிய பயணமாக இருந்து வந்த இவர் நடுவில் ஒரு 6 ஆண்டுகளுக்கு எழுதாமலேயே இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது, ஆனால் அதன் பிறகு சோவியத் லட்சியவாதங்களின் தோல்வி, இந்திய வெகுஜன அரசியல், தமிழக வெகுஜன அரசியல் ஆகியவற்றில் ஏற்பட்ட சில மாற்றங்களால் இவரது சிந்தனைகளிலும் மாற்றம் ஏற்பட்டது, வாழ்வின் அபத்தம், அர்த்தமின்மை, கட்டுண்டு கிடந்து உழலும் நவீன வாழ்வின் பீதி நிறைந்த முன்னேற்றங்கள் ஆகியவை இவரை பாதிக்கத் தொடங்கியபோது ஜோசப் ஜேம்ஸஎன்ற கலைஞன்- சிந்தனையாளன் பற்றிய கலக வாழ்வை இவர் ஜே ஜே சில குறிப்புகள் என்ற நாவலில் வெளிப்படுத்தி தமிழ் இலக்கிய உலகை அதிர்வலைகளை ஏற்படுத்தினார், பெரும்பாலும் கம்யூனிச சிந்தனை கொண்ட அத்தகைய இலக்கிய, விமர்சன சூழலில், கம்யூனிஸ்ட்கள் பற்றியும் மனித இயல்பு குறித்து அந்த நாவலில் இவர் தோலுரித்துக் காட்டியது, பரவலான அதிர்ச்சிகளுக்கிடையே கடுமையான விமர்சனத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

சுந்தர ராமசாமி இலக்கியத்தை பொறுத்தவரையிலும் ஒரு நடையியல் வாதி என்றே கூறலாம். வெகு ஜனக் கலாச்சாரத்திலும் பத்திரிகையிலும் சீரழிந்து வரும் மொழியை மீட்டெடுத்து அதன் அழகியல் கூறுகளுக்கு திரும்பும் கவனமும் இவரது நடையில் முக்கியமான அம்சமாகும், தமிழ் இலக்கிய மொழியில் நவீனத்துவத்தை புகுத்தியதில் முக்கியமாக கருதப்படும் புதுமைப்பித்தனின் தாக்கம் இவரது கதைகளில் இருப்பது பலருக்கு ஒரு குறிப்பிட்ட சிலகதைகளிலேயே தெரிய வரும், தனக்கே உரிய முறையில் இவர் நேர்த்தியாக படைப்புகளை உருவாக்கினார், கட்டுரை கதை கவிதை எதுவாயிருந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஒரு சரளமான மொழி நடை இவருக்கு கைகூடியது இவரது சிறப்பம்சம். இவரது பல்லக்கு தூக்கிகள் சிறுகதை உலக இலக்கிய மேதையான பிரான்ஸகாப்காவின் கதைக்கு ஒப்பானதாக கருதலாம்.

1959ஆம் ஆண்டிலிருந்தே கவிதைகள் எழுத துவங்கிய சுந்தர ராமசாமி, பசுவையா என்ற புனைப்பெயரில் கவிதைகளை படைத்தார், இவர் எழுதிய காலக்கட்டத்தில் புதுக் கவிதைகளை ஏற்றி கொள்ளாத பழைய யாப்புடை கவிதைகளின் மலிவு குவியலின் காலமாக விளங்கியது, வார்த்தை அதன் அர்த்தம் போன்ற தூலத் தன்மையிலிருந்து விலகிய கருத்து அல்லது சிந்தனையை குறிப்பதாய் கவிதை அமைய வேண்டும் என்ற புதுமையாளர்களின் கோட்பாட்டை இவர் ஆதரித்தே வந்தார்.

இவரது கவிதைகள் சில சமயங்களில் சிந்தனை, மொழி மற்றும் படிம வீச்சு கொண்டதாய் முழுமை பெற்றிருந்தாலும், பல இடங்களில் கவிதையின் சாத்தியக் கூறுகளை எட்ட முடியாத உரை நடைத் தன்மையை கைகொண்டுள்ளது, ஆனால் உணர்வுகளை உடனடியாகவும், பிரச்சாரம் ஆகாமலும், சூட்சமமாகவும் தெரிவிக்கும் கலை இவரது கவிதைகளில் காணலாம். இவரது கவிதைகள் அனைத்தையும் 108 என்ற தலைப்பில் தொகுத்துள்ளனர்.

இவரது மதிப்பீடுகள் பெரும்பாலும் ஆங்கில இலைக்கிய விமர்சகர் எஃப் ஆர் லீவிஸஎன்பாரின் மதிப்பீடுகளையே சார்ந்ததாக இருந்தது, வெகுஜன, சந்தை, நசிவு கலாச்சரத்திற்கு எதிராக கடைசி வரை எதிர்ப்புக்குரல் கொடுத்து வந்தவராய் சுந்தர ராமசாமியை நாம் ஒரு கலாச்சாரா போராளியாய் நினவு கொள்ளலாம்.

பிற்காலத்தில் இவர் மீது பல தாக்குதல் விமர்சனங்கள் பல்வேறு தரப்புகளிலிருந்தும் தொடுத்த போதும் எவரையும் கீழ்த்தரமாக நடத்தும், சிந்திக்கும் தன்மைகளை முற்றிலும் களைந்த மனித சுய மரியாதை என்பதை முற்றிலும் மதித்த சமரசமாகாத ஒரு சிறந்த மனிதார்த்தவாதியாக சுந்தர ராமசாமியின் வாழ்வும் பாடமும் வருங்கால இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையலாம்.

பசுவய்யா கவிதைகள

Share this Story:

Follow Webdunia tamil