Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ப‌ன்னா‌‌ட்டு ‌நிறுவன‌ங்க‌ளி‌‌ன் ஆ‌தி‌க்க‌த்தா‌ல் ஏ‌ற்பட‌ப்போகு‌ம் ஆப‌த்து - கோவை ஞா‌னி

ப‌ன்னா‌‌ட்டு ‌நிறுவன‌ங்க‌ளி‌‌ன் ஆ‌தி‌க்க‌த்தா‌ல் ஏ‌ற்பட‌ப்போகு‌ம் ஆப‌த்து - கோவை ஞா‌னி
, திங்கள், 6 டிசம்பர் 2010 (17:19 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌‌னியா.கா‌ம்: கருத்தரங்கில் நீங்கள் வெளியிட்ட, 'செம்மொழி மாநாட்டில் நாம் எதிர்பார்ப்பது என்ன?' என்ற புத்தகத்தில், தமிழ்ச் சமூகத்தில் இறுதி நோக்கம் மனித விடுதலை என்ற அடிப்படைய மறந்துவிடலாகாது. ஒற்றைப் பார்வை நமக்கு என்றும் பயன்தராது. சாதி ஆதிக்கம் அல்லது ஆண் ஆதிக்கம் தகர்வதால் மட்டுமே விரிவான மனித விடுதலையும் கிட்டாது. ஆதிக்கம் எந்த வடிவத்திலும் நமக்குத் தேவையில்லை என்ற முறையிலேயே விரிவான பார்வை தேவை. தமிழியல் ஆய்விற்கு இந்தப் பார்வைதான் பெரிதும் தேவை என்று சொல்லியிருக்கிறீர்கள். இதனை கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்?

கோவை ஞா‌னி: இந்த வாசகங்களை விரிவாக எழுதுவதற்கு இந்தச் சின்ன கட்டுரை வாய்ப்பு தராவிட்டாலும் கூட, அதனுடைய உள்ளார்ந்த என்னுடைய கருத்து என்ன என்பதை இப்பொழுது நான் சொல்ல விரும்புகிறேன்.

தமிழ் சமூகத்திற்குள் தலித்தியம் என்று ஒரு பார்வை, பெண்ணியம் என்று ஒரு பார்வை, பெரியாரியம் என்று பார்வை, மார்க்சியம் உட்பட வேறு சில பார்வைகளும் இன்று முன்வைக்கப்படுகின்றன. அடிப்படையில் தமிழனுக்கு விடுதலை வேண்டும் என்று சொன்னால், தமிழனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக மனிதனுக்கு விடுதலை. இந்தியாவில் இருக்கக் கூடிய எந்த சமூகத்தைச் சார்ந்தவருக்கும் விடுதலை என்பதில் நமக்கு எந்தவகையான மறுப்பும் இல்லை. இதை உலக அளவில் நாம் விரிவுபடுத்திக்கொள்ளலாம்.

இது ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டில் இன்று நிலவக்கூடிய ஆதிக்கம் என்று எடுத்துக்கொண்டால் வடவர் ஆதிக்கம் என்று நாம் பேசினோம். தமிழ்நாட்டுத் தொழிலில் வடவர் ஆதிக்கம் என்று பேசினோம். உண்மைதான் அது. ஆனால் இன்றைக்கு எடுத்துக்கொண்டால், வடவர் ஆதிக்கம் மட்டுமல்ல, பன்னாட்டு நிறுவனங்களுடைய ஆதிக்கம் என்பது பிரமாண்டமான அளவிற்கு வளர்ந்துள்ளது. உலக மயமாதல், சந்தைப் பொருளாதாரம் இவற்றையெல்லாம் இந்தியா ஏற்றுக்கொண்ட நிலையில், தமிழ்நாடுக்குள்ளேயும் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் முதலியவைகளெல்லாம் வந்து சேர்ந்தன.

சொல்லப்போனால், இந்தக் கலைஞருக்கு ஏன் இத்தனை பெரிய ஆர்வம் என்பது எனக்குப் புரியவேயில்லை. ஏனென்றால் அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை தமிழ்நாட்டிற்குள் வந்து சேர்ந்துள்ளது. அவற்றிற்கெல்லாம் ஏராளமான உரிமைகளை அரசு வழங்கியிருக்கிறது. என்னென்ன உரிமைகள் என்று சொன்னால், நிலத்தடி நீர் எவ்வளவு வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளலாம். விலை நிர்ணயத்தை எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். தொழிலாளர்களுக்கு உரிமை தரவேண்டிய அவசியமே இல்லை இதுபோன்று வரிச்சலுகைகள், மின்சாரம் என்பது 24 மணிநேரமும் இருக்கும்.

தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய தமிழனுக்கான தொழிற்சாலைகளில் மின்சாரம் தடையிருந்தாலும் கூட அவர்களைப் பொறுத்தவரையில் 24 மணி நேர மின்சாரம். 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டாலும் கூட அதற்கான இழப்பீடு, இந்த மாதிரியெல்லாம் கொடுக்கப்படுகிறது. இதுபோன்று சீனாவில் இல்லை, வேறு நாடுகளிலும் இல்லை. இவ்வளவு உரிமைகள், ஆதிக்கத்தை கொடுத்தீர்கள் என்று சொன்னால், தமிழ்நாட்டில் என்ன நடைபெறும்.

இதேபோல பசுமைப் புரட்சி என்று வந்து வேளாண்மை எவ்வளவு பெரிய அளவிற்கு இன்று நாசமாகியிருக்கிறது. அதேமாதிரி நிலங்கள் பெரிய அளவில் விற்பனையாகிறது, தொழில் வளம் பெருக வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்திற்காக. ஒரு வகையில் பார்த்தீர்களென்றால், காவிரி இல்லை என்று சொன்னால் கூட கலைஞர் வரவேற்பார் போலத் தெரிகிறது. ஏனென்று சொன்னால், அவ்வளவு நிலங்களையும் தரிசு நிலங்களாக்கி தொழில் நிறுவனங்களுக்கு கொடுத்துவிடலாம். நீர்ப் பிரச்சனை என்பது ஒரு கட்டத்தில் பெரும் பிரச்சனையாக வரும் என்பது வேறு விஷயம்.

இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் துறையில் மட்டுமல்ல, பொருளியல் துறையிலும் இறங்கி நாளடைவில் அரசியலில் துறையிலும் பன்னாட்டு நிறுவனங்களுடைய ஆதிக்கம் பெருய அளவிற்குப் பெருகும் என்பதில் ஆச்சரியமே இல்லை. சொல்லப்போனால் இந்தியா என்பது மேற்கத்தியரினுடைய உலகமயமாக்கல் கோட்பாட்டிற்கு தன்னை பலிகொடுத்து இந்தியாவினுடைய சுதந்திரம் முதலியவற்றை அடமானம் வைத்திருக்கிறது என்பதைப் பற்றி நல்ல அறிஞர்கள் ஏராளமான ஆதாரங்களோடு பேசியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நாம் அதிகமாகப் பேசியிருக்கிறோம், சாதி - குறிப்பாக பிராமணர் ஆதிக்கம் என்பது பற்றி. பெரியார்கள் போன்றவர்களெல்லாம் அதற்கான தீவிர முயற்சி எடுத்தார்கள் என்றெல்லாம் பார்க்கிறோம். ஆனாலும் கூட ஆரியத்தினுடைய செல்வாக்கு என்பது பெரும் அளவிற்கு இன்று வரை குறைந்த மாதிரி தெரியவில்லை. பல அம்சங்களில், பல கூறுகளில் அவர்களுடைய ஆதிக்கம் நிலவுகிறது. கலைஞர் இவற்றை முற்றாக மறுக்கிறாரா என்று சொன்னால், அவ்வப்போது சில விமர்சனங்களை முன்வைப்பாரோயொழிய, எந்த வகையிலும் அதை அவர் உதறிக்கொள்வதாகவோ, மறுப்பதாகவோ தெரியவில்லை.

இதுஒருபுறமிருக்கட்டும், அடிப்படையில் நான் சொல்வது, ஆதிக்கம் எந்த வடிவத்திலும் வேண்டாம் என்று சொன்னால், இந்து மதமோ இன்னொரு மதமோ, பிரமாண சாதியோ வேறுவொரு வகையான சாதியோ, அது ஒரு சமயம் ரெட்டியாராக இருக்கலாம், மற்றவர்களாக இருக்கலாம், கவுண்டராக இருக்கலாம் அந்த ஆதிக்கமும் இங்கு வேண்டியதில்லை. அதேபோல ஆண் ஆதிக்கம் என்று சொல்லக்கூடியது பெண்ணை அடிமைப்படுத்த வேண்டாம். ஆதிவாசிகளை நாம் அடிமைப்படுத்த வேண்டாம். எந்த ஆதிக்கமும் தேவையில்லை, அப்பொழுதுதான் மனித விடுதலை சாத்தியம் என்பது உண்மைதான். ஆனால் நிலவக்கூடியதை பார்த்தீர்களானால், ஒன்றைச் சொல்லலாம், பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து இங்கு வருகின்றன, இந்திய முதலாளிகள் பெருமளவிற்கு அவர்களோடு ஒத்துழைக்கிறார்கள் என்றால், அதனுடைய விளைவுகள் என்னவென்று பாருங்கள்.

இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டால், பேராசிரியப் பெருமக்கள் இந்த ஆதிக்கத்திற்கு எதிராக இல்லை. அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள் இந்த ஆதிக்கத்திற்கு எதிராக இல்லை. சிறு முதலாளிகள் வரை இந்த ஆதிக்கத்திற்கு எதிராக இல்லை. காவல்துறையைச் சார்ந்தவர்கள் இந்த ஆதிக்கத்திற்கு எதிராக இல்லை. எல்லோருமே எப்படியாவது ஒரு வகையில் ஏவல் செய்யக்கூடியவர்களாக - ஏனென்று சொன்னால் நிறைய அதிக கூலி கிடைக்கிறது, அதிக லாபம் கிடைக்கிறது, பதவி உயர்வு கிடைக்கிறது, சம்பாத்தியம் அதிகரிக்கின்றது. அதேபோல கணினி தொழில்நுட்பம் என்று சொல்லி பெரிய அளவிற்கு, கலைஞர் போன்றவர்களோட தூண்டுதலோடு நடைபெற்று கடைசியில், லட்சங்களை சம்பாதிக்கலாம் என்ற கனவோடு இளைஞர்கள் மேற்கு நாடுகளுக்குச் செல்கிறார்கள்.

அடிப்படையில் பார்த்தீர்களென்றால், ஆங்கிலத்திற்கு முதன்மை கொடுத்து, தமிழை ஓரத்திற்கு ஒதுக்கினால் என்ன ஆகிறது என்று பார்த்தால் தமிழுக்கு பள்ளிக்கூடங்களில் மரியாதை இல்லை. தமிழ் வரலாறு பற்றி - நான் இப்படிச் சொல்ல விரும்புகிறேன். மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் பசங்களுக்கு திருக்குறள் மீது ஏதாவது பற்று இருக்குமா? தேவாரத்தின் மீது ஏதாவது அக்கறை ஏற்படுமா? சங்க இலக்கியங்களைப் படிப்பார்களா? தமிழ்நாட்டினுடைய இயற்கை வளங்களைப் பற்றி காவிரியைப் பற்றி அக்கறை உண்டா? தமிழ்நாட்டு விளைச்சலைப பற்றி அக்கறை உண்டா? கிராமத்து மக்கள் மீது ஈடுபாடு ஏற்படுமா?

ஆங்கிலம், அதிகாரம், பதவி, பணம் என்கின்ற உணர்வையே மையப்படுத்தி மெட்ரிகுலேஷன் பள்ளி முதலிவற்றில் கல்வி அமைத்திருக்கும் போது, தமிழ் மக்களை, தமிழ் நிலத்தை, தமிழ்நாட்டு இயற்கையை, தமிழ்நாட்டில் வாழக்கூடிய பழங்குடியின மக்களை, தமிழ்நாட்டுப் பெண்களை, குழந்தைகளை யார் பொருட்படுத்துவார்கள். இந்த இளைஞர்கள் மற்றவர்களெல்லாம் எந்த வகையானப் பொறுப்புகளை எடுத்துக்கொள்வார்கள்? அரசு இதையெல்லாம் ஊக்குவிக்கும்போது பார்த்தீர்களானால், தமிழ்நாடு எதிர்காலத்தில் என்ன ஆகும்?

இப்பொழுது தமிழ்நாடு எவன் எவனுக்கோ அடிமைப்பட்டிருக்கிறது என்று சொன்னால், இந்த நிலைமை இன்னும் கடுமையாகும்...

தொடரும்...

Share this Story:

Follow Webdunia tamil