Publish Date: Fri, 21 Apr 2017 (17:11 IST)
Updated Date: Fri, 21 Apr 2017 (17:18 IST)
வருகிற 28ஆம் தேதி பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாக இருக்கிறது அந்த பிரமாண்டமான படம். கர்நாடகத்தைத் தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் அந்தப் படத்துக்கு ஏகோபித்த வரவேற்பு. அங்கு மட்டும் ஒரு நடிகர் 9 வருடங்களுக்கு முன்பு பேசியதைக் காரணம் காட்டி, படத்தை வெளியிடக் கூடாதென மிரட்டுகின்றன அரசியல் அமைப்புகள். 9 வருடங்களாக இல்லாத பிரச்னை இப்போது ஏன்?
விஷயமே வேறு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அந்தப் படத்தின் முதல் பாகம் வெளியானபோது, கன்னட உரிமை 12 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது. ஆனால், படமோ 50 கோடி வசூல் செய்ய, செலவுபோக 35 கோடி ரூபாய்க்கும் மேல் வாங்கியவர்களுக்கு லாபம் கிடைத்திருக்கிறது.
இதனால் உஷாரான தயாரிப்பாளர், இந்தமுறை கன்னட உரிமையாக 35 கோடி ரூபாயை நியமித்தாராம். இதனால், அதிர்ச்சியானார்களாம் கன்னட விநியோகஸ்தர்கள். இவ்வளவு தொகை கொடுத்து வாங்கினால், முதல் பாகத்தைப் போல லாபம் பார்க்க முடியாது என்று உணர்ந்தவர்கள், 9 வருடங்களுக்கு முன்பு நடிகர் பேசியதை தூசு தட்டி எடுத்திருக்கிறார்கள்.
இந்தத் தொகையை தயாரிப்பாளர் குறைத்தால் போதும். எந்தப் பிரச்னையும் இல்லாமல் படம் ரிலீஸ் ஆகிவிடும்.