Publish Date: Thu, 29 Dec 2022 (09:17 IST)
Updated Date: Thu, 29 Dec 2022 (09:19 IST)
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் வாட்ஸப் செயலியில் தரக்குறைவான ஸ்டேட்டஸ் வைப்பதை தடுக்கும் வகையில் புதிய அப்டேட் வெளியாக உள்ளது.
உலகம் முழுவதும் ஏராளமானோரால் பயன்படுத்தப்படும் செயலியில் முக்கியமானது வாட்ஸப். காலத்திற்கு ஏற்ப வாட்ஸப் செயலி தொடர்ந்து பல அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. வாட்ஸப் மூலமாக பணம் செலுத்தும் வசதி, அதிக அளவு உள்ள ஃபைல்களை ஷேர் செய்யும் வசதி என பல வசதிகள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல தனிநபர் பாதுகாப்பு சார்ந்த கொள்கைகளையும் வாட்ஸப் அப்டேட் செய்து வருகிறது. இதுவரை வாட்ஸப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸ்களுக்கு எந்தவிதமான தணிக்கையும் செய்யப்படுவதில்லை. யார் என்ன ஸ்டேட்டஸ் வேண்டுமானாலும் வைக்கலாம் என்ற நிலையே உள்ளது.
இனி அதிலும் சில மாற்றங்களை வாட்ஸப் செய்கிறது. தனி நபரை தரக்குறைவாக விமர்சித்தோ அல்லது பெண்களை அவதூறாக சித்தரித்தோ ஸ்டேட்டஸ் வைத்தால் அந்த ஸ்டேட்டஸ் மீது புகாரளிக்கும் வசதி அப்டேட் செய்யப்பட உள்ளது. அளிக்கப்படும் புகார்களை ஆய்வு செய்து அந்த ஸ்டேட்டஸை வாட்ஸ் அப்பே நீக்கிவிடும். தொடர்ந்து அவ்வாறாக ஸ்டேட்டஸ் போடுபவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஸ்டேட்டஸே போட முடியாமல் முடக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது.