Publish Date: Tue, 15 Jan 2019 (18:59 IST)
Updated Date: Tue, 15 Jan 2019 (19:04 IST)
நமக்கு பிடித்த டிவி சேனல்களை பார்க்கும் திட்டத்தில் குறைந்த அளவு 100 சேனல்களுக்கு ரூ 153 என்ற அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டிராய் அறிவித்துள்ளது.
பயனாளர்கள் தற்போது தமக்கு தேவைப்படும் சில சேனல்களுடன் தேவைப்படாத சேனல்களுக்காகவும் கட்டணம் செலுத்திவருகின்றனர்.
இனிமேல் தேவைப்படுகிற சேனல்களுக்கு மாத்திரம் கட்டணம் செலுத்தி பார்த்துக் கொள்ளலாம் என டிராய் கூறியுள்ளது.
இதனடிப்படையில் பயனாளர்களுக்கு விருப்பமான சேனல்கள் அட்டவணையை கேபிள் டிவி அல்லது டிடிஎச் வழங்கும் நிறுவனத்திடம் வரும் ஜனவரி 31 ஆம் தேதி வழங்கும் படி கூறியது.
இதனையடுத்து குறைந்த பட்ச கட்டணம் உள்ளிட்ட சில விபரங்களையும் டிராய் அறிவித்தது. இந்நிலையில் டிவி சேனல்களை பார்க்கும் திட்டத்தின்படி குறைந்த பட்சம் 100 சேனல்களுக்கு கட்டணமாக ரூபாய் 153 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த அறிவிப்பு வரும் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் பயனாளர்கள் குறைந்த பட்சம் 100 சேனல்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இது இலவச சேனல்களாகவும் இருக்கலாம் அல்லது கட்டண சேனல்களாகவும் இருக்கலாம். ஆனால் இந்த குறைந்த பட்ச கட்டணத்தின் அடிப்படையில் எச்டி தொழில்நுட்ப சேனல்களை தேர்ந்தெடுக்க முடியாது.
எச்டி சேனல்கள் வேண்டுமானால் அதற்குரிய கட்டணத்தைசெலுத்தி பெற்றுக்கொள்ளமுடியும். ஒரு சேனலுக்கு அதிக பட்சமாக மாதத்துக்கு 19 ரூபாய்க்கு மேல் இருக்காது என்று அறிவித்துள்ளது.