Publish Date: Wed, 20 Nov 2019 (10:10 IST)
Updated Date: Wed, 20 Nov 2019 (10:17 IST)
கடந்த செப்டம்பர் மாதம் மட்டுமே ஏர்டெல், வோடஃபோன், ஐடியா வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கில் குறைந்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் நெட்வொர்க் சந்தையில் போட்டி போட்ட நிறுவனங்கள் ஆகும். இந்தியாவின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏர்டெல், மற்றும் வோடஃபோன் வாடிக்கையாளர்களாகவே இருப்பர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சிம் வசீகரமான இண்டர்நெட் பிளானுடன் அறிமுகமாகியது. இதனால் வாடிக்கையாளர்கள் அப்படியே கொத்து கொத்தாக ஜியோவுக்கு தாவினார். ஏர்டெல் வோடஃபோன் ஆகிய நிறுவனங்களுக்கு இது பேரிடியாக் இருந்தது. எனினும் வாடிக்கையாளர்களை தக்கவைக்க காலப்போக்கில் ஜியோவுக்கு நிகரான இண்டர்நெட் பிளான்கள் கொண்டுவரப்பட்டன.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வோடஃபோன் ஐடியா நிறுவனம் 25 லட்சத்து 70 ஆயிரம் வாடிக்கையாளர்களையும், பார்தி ஏர்டெல் நிறுவனம் 23 லட்சத்து 80 ஆயிரம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க, ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 69 லட்சத்து 83 ஆயிரம் அதிகரித்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.