குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள். பின்னர் அதனை ஓதுங்கள். குர்ஆனைக் கற்று கற்றபடி நடந்தவருக்கு உதாரணம் கஸ்தூரி நிறைந்த குடுக்கை எல்லா இடத்திலும் தனது நறுமணம் கமழச் செய்வது போன்றதாகும், குர்ஆனைக் கற்று தன் உள்ளிலேயே அதனை உறைய வைத்தவர் கஸ்தூரி நிறைந்த முத்திரை இடப்பட்ட குடுக்கையைப் போலிருக்கிறார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைராவும் உபய்யு இப்னு க·பும் (ரலி) நூல்கள் : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா
வாரிசுரிமைச் சட்டங்களையும் திருக்குர்ஆனையும் கற்று, பிறருக்குக் கற்றுக் கொடுங்கள். ஏனெனில் நான் மரணமடைபவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : திர்மிதீ
உமக்கு நான் குர்ஆனைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று எனக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருக்கிறான் என்று உபய்யுவினிடம் திருநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னுடைய பெயரைத் தங்களிடம் அல்லாஹ் குறிப்பிட்டானா என்று உபய்யு வினவினார். அல்லாஹ் உம் பெயரைக் குறிப்பிட்டான் என்று திருநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது உபய்யு (மகிழ்ச்சியால்) அழத் தொடங்கிவிட்டார்.
அறிவிப்பவர் : அனஸுப்னு மாலிக் (ரலி)
நூல் : புகாரீ
இந்த ஹமீஸில் கண்டவாறு உபய்யுப்னு கஃப்(ரலி) ஆனந்தக் கண்ணீர் விட்டு முழுமுயற்சியுடன் திருக்குர்ஆனை முறைப்படி கற்றுக் கொண்டார். ஜிப்ரயீல் அலைஹி அவர்களிடமிருந்து திருநபி(ஸல்) கற்றுக் கொண்டதைப் போன்று திருநபி(ஸல்) அவர்களிடம் உபய்யுப்னுகஃபு(ரலி) கற்றுக் கொண்டதுடன், ஏனைய ஹுஹாபிகளுக்குத் திருக்குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்கும் பணியிலும் திருநபி(ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்டார். இவரிடமிருந்து மற்றவர்கள் கிராஅத்தைக் கற்றுக் கொண்டனர்.
அபூஹுரைரா(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), அப்துல்லாஹ் இப்னுஸ்ஸலாம்(ரலி) முதலியவர்கள் உப்ய்யுப்னுகஃப்(ரலி) கிராஅத்தைக் கற்றுக் கொண்டார். இவர்களிடமிருந்து தாபியீன்களில் பெரும் பகுதியினர் கற்றுக் கொண்டனர்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), ஸாலிம்(ரலி), முஆது இப்னுஜபல்(ரலி), உபய்யு கஃபு(ரலி) ஆகிய நால்வரிடமிருந்து திருக்குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று திருநபி(ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னில் ஆஸ் (ரலி)
நூல் : புகாரீ
இந்நால்வரில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) ஸாலிம்(ரலி) ஆகிய இருவரும் முஹாஜிர்கள், முஆதுப்னு ஜபல்(ரலி) உபய்யுப்னுகஃப்(ரலி) ஆகிய இருவரும் அன்ஸார்கள். ஸாலிம் என்பவர் அபூ ஹுதைபா என்பவரிடம் அடிமையாக இருந்து விடுதலை பெற்றவர். இப்னு மஃகல் என்றும் ஸாலிமுக்கு மற்றொரு பெயருண்டு. திருநபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு அபூபக்கர் ஸித்தீக்(ரலி) அவர்களின் கிலாபத் ஆட்சிக் காலத்தில் கலகக்காரர்கள் நிகழ்த்திய யுத்தத்தின் போது யமாமாவில் நடைபெற்ற போரில் மேற்கண்ட அபூஹுதஃபாவின் அடிமையான ஸாலிமுப்னு மஃகல் (ரலி) மரணமடைந்தார்கள். உமர் பாறூக் (ரலி) அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் முஆதுப்னு ஜபல் (ரலி) ஹாம் பகுதியில் வாந்தி பேதியால் மரணமடைந்தார்கள். அப்துல்லாஹப்னு மஸ்ஊத்(ரலி) உபய்யுப்னு கஃபு(ரலி) ஆகிய இருவரும் உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மரணமடைந்தார்கள். காத்திபுல் வஹ்யில் ஒருவரான ஜைதுப்னுதாபித் (ரலி) அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தார்கள். தஜ்வீதுச் சட்டப்படி திருக்குர்ஆன் ஓதும் கிராஅத்துக் கலைக்கு இவரே தலைவராவார்.
திருக்குர்ஆனைத் தவறின்றி ஓதுங்கள், தஜ்வீது தான் கிராஅத்துக்கு ஆபரணம் என்று இப்னு மஸ்ஊத்(ரலி) கூறியுள்ளார்கள் என்று அத்தாயி(ரஹ்) முதலியோர் அறிவித்துள்ளனர்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)