Publish Date: Sat, 17 Oct 2020 (16:20 IST)
Updated Date: Sat, 17 Oct 2020 (16:53 IST)
அதிமுக இன்று தனது 49 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் கட்சி தொண்டர்களுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுகவில் பொருளாளராக இருந்த எம்ஜிஆருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே எழுந்த அரசியல் பிரச்சனைகளால் அந்த கட்சியில் இருந்து பிரிந்து வந்து எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை 1972 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பெற்றார். அதிலிருந்து தொடர்ந்து 10 ஆண்டுகள் அவர் ஆட்சியில் இருந்தார். பின்னர் அவர் மறைவிற்குப் பின்னரே ஆட்சி திமுக வசம் சென்றது.
இதையடுத்து கட்சிக்கு ஜெயலலிதா தலைமையேற்று பின்னர் ஆட்சியில் அமர்ந்தார். சுதந்திரத்துக்கு பிறகு தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியாக அதிமுக உள்ளது. இந்நிலையில் அந்த கட்சி இன்று தனது 49 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி அக்கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சியாக அதைக் கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் ‘கழக பொன்விழா ஆண்டிலும் அம்மாவின் அரசாட்சியே தொடர்ந்தது என்னும் வரலாற்றை படைப்போம்! வாகை சூடுவோம்!!’ என டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.