Publish Date: Tue, 21 Feb 2017 (04:58 IST)
Updated Date: Mon, 27 Mar 2017 (16:03 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தானாகவே விலகிய கிரிக்கெட் தல தோனியை, ஐபிஎல் போட்டி தொடரில் புனெ அணியின் கேப்டன் பதவியில் இருந்து நிர்வாகம் திடீரென நீக்கியது. இதனால் தோனி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் தோனியின் நீக்கத்தி/ற்கு முன்னாள் இந்திய அணியின் கேப்டன் அசாரூதின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அசாரூதின் கூறியதாவது: 'புனே அணி நிர்வாகத்தின் இந்த முடிவு மிகவும் இழிவானது. இந்திய கிரிக்கெட் அணியின் பொன்னாக திகழ்ந்தவர் தோனி. சுமார் 8 முதல் 9 வருடங்களாக கேப்டன் பதவியில் டோனி சாதனைப் படைத்துள்ளார். நாங்கள் பணம் செலவழிக்கிறோம். அணியை நடத்துபவர்கள் நாங்கள்தான் என்று அந்த அணியின் உரிமையாளர்கள் கூறலாம்.
ஆனால் அதேவேளையில் தலைமை பதவியில் இருந்து நீக்குவதற்கு முன்னதாக தோனியின் தகுதியையும், திறமையையும் நம்பகத்தன்மையையும் அவர்கள் சீர்தூக்கி பார்த்திருக்க வேண்டும். இரக்கமே இல்லாமல் கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்கியுள்ளது முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற அடிப்படையில் எனக்கு ஆத்திரத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது' என்று அசாரூதின் கூறியுள்ளார்.