Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக்ரா கோட்டை!

ஆக்ரா கோட்டை!
, வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:22 IST)
ஆக்ரா என்றாலே தாஜ் மஹால்!

காதலிற்கும், கட்டடக் கலைக்கும் அதிசயிக்கத்தக்க அழியாத சான்றாக இருந்துவரும் தாஜ் மஹால் என்ற அற்புதத்திற்கு அருகே, யமுனை நதிக்கரையிலுள்ள மற்றுமொரு பிரம்மாண்ட மானுடப் படைப்பாக திகழ்கிறது லால் கீலா என்றழைக்கப்படும் ஆக்ரா செங்கோட்டை.

webdunia photoFILE
தாஜ் மஹாலைப் போல இதுவும் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இரண்டரை கிலோ மீட்டர் சுற்றளவில் உறுதியான சுவர்களுடன் திகழும் இக்கோட்டை, ஓராயிரம் ஆண்டுக் கால வரலாற்றுச் சுவடாக விளங்குகிறது.

முகலாயப் பேரரசர் ஷா ஜஹானின் கை வண்ணமே ஆக்ரா கோட்டையை, இந்த நாட்டிலுள்ள மற்ற கோட்டைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

இக்கோட்டையிலுள்ள மூசாம்மன் புர்ஜ், காஸ் மஹால் ஆகிய பகுதிகள் கட்டக் கலைக்கும், சிற்ப வேலைப்பாடுகளுக்கும் அழியாத சான்றாகத் திகழ்கின்றன.

தனது காதல் மனைவி மும்தாஜ் இறந்தபின், அவளின் நினைவாக படைத்த தாஜ் மஹாலை - தனது வாழ்வின் கடைசி காலத்தில் தனது மகனால் இதே கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்தபோது - மூசாம்மன் புர்ஜ் கலைக்கூடத்திலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தார் ஷா ஜஹான் என்று வரலாறு கூறுகிறது.

ஆக்ரா கோட்டைக்குள் ஷா ஜஹான் கட்டிய அழகிய பகுதிகளில் எங்கிருந்து பார்த்தாலும் தாஜ் மஹாலின் உன்னத காட்சியைக் காணலாம்.

webdunia
webdunia photoFILE
தாஜ் மஹாலை நேரில் பார்ப்பதிலும், சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில், ஷா ஜஹான் ஆக்ரா கோட்டையில் இருந்து அதனைப் பார்த்துக் கொண்டிருந்த இடங்களில் இருந்து பார்ப்பதும் வித்தியாசமான அனுபவங்கள்.

ஆக்ரா கோட்டையில் ஷா ஜஹான் உலாவிய இடங்கள் ஒவ்வொன்றையும் படங்களிலும், காட்சிகளிலும் கண்டுவிடலாம், ஆனால் நேரில் பார்ப்பதிலும், ரசிப்பதிலும் கிடைக்கும் அனுபவத்தைப் பெற முடியாது.

அது தாஜ் மஹாலைப் போல, ஆக்ரா கோட்டை எல்லாவிதத்திலும் வித்தியாசமானது.

ஆக்ரா கோட்டை வரலாறு!

தங்கள் ஆட்சியின் தலை நகராக, அதிகார பீடமாக கொண்டிருந்த ராஜ புதன அரசர்கள் 1080ஆம் ஆண்டில் கட்டியது (ஆக்ரா)மண்கோட்டை. 400 ஆண்டுக் காலத்திற்குப் பிறகு, அவர்களைத் தோற்கடித்த சிக்கந்தர்

லோடியின் (1487-1517) ஆட்சியின் கீழ் இக்கோட்டை வந்தது. அதுவரை டெல்லி சுல்தான்களின் தலைநகராக டெல்லி மட்டுமே இருந்த நிலையில் ஆக்ராவை இரண்டாவது தலைநகராக மாற்றினார் சிக்கந்தர் லோடி. சிக்கந்தர் மறைவிற்குப் பிறகு மகுடம் சூடிய அவருடைய மகனான இப்ராஹிம் லோடி 9 ஆண்டுக்காலம் இக்கோட்டையிலிருந்துதான் ஆட்சி புரிந்துள்ளார்.

webdunia
webdunia photoWD
இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் இக்கோட்டையில் பல கிணறுகள் வெட்டப்பட்டதாகவும், மசூதிகளும், அரண்மணைக் கூடங்களும் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

1526ஆம் ஆண்டு நடந்த முதலாம் பானிபட்டுப் போரில் இப்ராஹிம் லோடியை முகலாய பேரரசர் பாபர் தோற்கடிக்க, ஆக்ரா கோட்டை முகலாயர் வசமானது. ஆக்ரா கோட்டையில் இப்ராஹிம் லோடி சேர்த்து வைத்திருந்த செல்வங்கள் - அதில் ஒன்றுதான் இன்றளவும் பேசப்படும் கோஹினூர் வைரம் - முகலாய பேரரசு வளமாக, பலமாக காலூன்ற உதவியது.

பாபருக்குப் பின் ஹூமாயூன் இக்கோட்டையில்தான்(1530) முடி சூட்டப்பட்டார். பெலிகிராம் போரில் ஹூமாயூனைத் தோற்கடித்த ஆஃப்கானிய அரசர் ஷேர் ஷா கைவசமானது இக்கோட்டை.

1556இல் நடந்த இரண்டாவது பானிபட்டுப் போரில் வெற்றிபெற்று மீண்டும் முகலாய பேரரசு காலூன்றியது. ஹூமாயூனுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற பேரரசர் அக்பர், தனது தலைநகரை டெல்லியிலிருந்து நிரந்தரமாக ஆக்ராவிற்கு மாற்றினார்.

இன்றைக்கு நாம் காணும் ஆக்ரா கோட்டை அக்பரால் கட்டப்பட்டதுதான். அதுவரை மண் கோட்டையாக இருந்த இக்கோட்டையை, சாண்ட்ஸ்டோன் என்றழைக்கப்படும் சிகப்பு பாறைக் கற்களைக் கொண்டு 8 ஆண்டுக் காலத்தில் (1573) கட்டி முடித்தார் அக்பர். இந்தக் கட்டுமானப் பணியில் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

யமுனை நதிக்கரையில், உயர்ந்த மதில் சுவர்களுடன் பலமாக கட்டப்பட்ட இக்கோட்டைக்குள் அக்பரின் தலைநகரமே இயங்கி வந்துள்ளது. அக்பருக்குப் பின் ஜெஹாங்கீர், அவருக்குப் பின் ஷா ஜஹான், பிறகு அவுரங்சீப் என முகலாய பேர்ரசர்கள் இக்கோட்டையிலிருந்துதான் இந்தியாவின் பெரும்பகுதி நிலப்பரப்பை ஆண்டுள்ளார்கள்.

webdunia
webdunia photoWD
பேரரசர் அக்பர் உறுதியாகக் கட்டிய இக்கோட்டையின் சில பகுதிகளை இடித்துவிட்டு, பளிங்கு கற்களைக் கொண்டு பேர்ரசர் ஷா ஜஹான் கட்டிய கூடங்களும், கோபுரங்களும்தான் இக்கோட்டைக்கு பெருமை சேர்த்தன.

இன்றைக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இக்கோட்டைக்கு வருகிறார்கள் என்றால் அந்தப் பெருமையும் பேரரசர் ஷா ஜஹானுக்கே உரியது.

Share this Story:

Follow Webdunia tamil