Publish Date: Fri, 29 Apr 2022 (00:17 IST)
Updated Date: Fri, 29 Apr 2022 (00:18 IST)
நோய்களைக் குணப்படுத்த மருத்துவத்தில் எத்தனையோ சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் பக்கவிளைவு இல்லாத, இயற்கையான ஒரு சிகிச்சை முறைதான் யோக முத்திரைகள்.
நோய்களை வராமல் தடுக்கவும், வந்த நோய்களைக் கட்டுப்படுத்தவும் முத்திரைகள் உதவுகின்றன. உடலின் சமநிலையின்மை அல்லது செயல்குறைபாட்டை நரம்பியல் நிபுணர்கள் மூளையைத் தூண்டச் செய்து குணமாக்குகின்றனர்.
இதையே, பழங்காலத்தில் யோகிகள் முத்திரைகள் மூலமாக சரி செய்தனர். இந்த முத்திரைகள், ஹார்மோன் சுரப்பிகள் செயல்பாடு, பிராண சக்தி ஆகியவற்றை சீராக்குவதுடன் உடல் மற்றும் மனதை அமைதியாக்கி சமநிலையிலும் சீராக செயல்படவும் வைக்கின்றன.
இவ்வாறு பல சிறப்புகளைக் கொண்ட முத்திரைகள் விரல்களைப் பயன்படுத்தியே பெரும்பாலும் செய்யப்படுகின்றன. இதில் தலையைப் பயன்படுத்தி செய்யும் முத்திரையும் உண்டு. இதை சிரச முத்திரை என்று கூறுகிறோம். விரல்களால் செய்யப்படும் முத்திரைகளை கை(ஹஸ்த முத்திரை) எனவும், உடலின் மூலம் செய்யும் முத்திரை காய முத்திரை(பந்தா ஆதார) எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.
இவற்றை சின் முத்திரை, ஞான முத்திரை, இதய முத்திரை, பிராண முத்திரை, சாம்பவி முத்திரை, முஷ்டி முத்திரை என் பல வகைப்படுத்தலாம். இவை உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. இத்துடன் மனதுக்கு ஆனந்த உணர்வு, அமைதி போன்ற நல்ல உணர்வுகளைத் தரும் வல்லமையும் முத்திரைகளுக்கு உண்டு. இதனால்தான் அமைதியை விரும்புகிறவர்கள், யோகாசனம் செய்கிறவர்கள் முத்திரைகளைப் பயன்படுத்துகிறார்கள்.