புண்டரீகாக்ஷன் என்ற எம்பெருமான் திருச்சிராப்பள்ளிக்கருகிலே உறையூர் போகும் பாதையில் திருவெள்ளறை என்கின்ற இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளார்.
அமைந்துள்ள இடம்: - திருச்சியிலிருந்து உறையூர் போகும் பஸ் வழியில் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு ஸ்ரீரங்கத்திலிருந்து உத்தமர் கோயில் வழியாகவும் பேருந்தில் செல்லலாம். தங்களுக்கு வசதியான விடுதிகள் இல்லாததால் திருச்சியிலிருந்து சென்று பரமனைத் தரிசித்து விட்டு வரலாம். பெரிய மதில்களுடன் கூடிய விசாலமான கோயில்.
மூலவர்: - புண்டரீகாக்ஷன் - செந்தாமரைக் கண்ணன், நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம்.
தாயார்: - செண்பகவல்லி என்கின்ற பங்கயச் செல்வி. தாயாருக்குத் தனிச் சன்னிதி உண்டு. தாயாரின் உற்சவமூர்த்திக்கு பங்கஜவல்லி என்ற திருநாமம்.
தீர்த்தம்: - திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா என்று ஏழு தீர்த்தங்கள் மதிலுக்குள்ளகாவே அமைந்துள்ளன.
விமானம்: - விமலாக்ருதி விமானம்.
சிறப்பம்சம்: - எங்குமில்லாத வகையில் இக்கோயிலில் உத்தராயண வாசல் என்றும் தக்ஷிணாயன வாசல் என்றும் இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆணி முதல் மார்கழி வரை தக்ஷிணாயன வாசல் வழியாகவும் கோயிலில் பெருமானைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.
சிபிச்சக்கரவர்த்திக்கு ச்வேத வராஹனாக (வெள்ளைப் பன்றி) பெருமாள் காட்சி தந்ததால் பெருமாளுக்கு ச்வேதபுரிநாதன் என்று பெயர் ஏற்பட்டதாக தலபுராண வரலாறு கூறுகிறது. இதன் காரணமாகவே இத்தலத்திற்கும் ஸ்வேதபுரி nக்ஷத்திரம் என்றும் பெயர் வந்தது.
சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் இவர்களுக்குத் தனிச்சன்னிதிகள் உள்ளன. ஸ்ரீதேவி, பூதேவி, சூர்ய சந்திரர்கள், ஆதிசேஷன் முதலியவர்கள் மனித உருவில் வந்து பக்கத்தில் நின்று கைங்கர்யம் செய்வது தனிச்சிறப்பு.
மங்களாசாஸனம்: - பெரியாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம் செய்துள்ளனர். மொத்தம் 24 பாசுரங்கள்.