Publish Date: Mon, 12 Jul 2021 (23:54 IST)
Updated Date: Mon, 12 Jul 2021 (23:56 IST)
லிங்கம் என்றால், உருவமற்ற அருவ வடிவிலான பொருளின் அடையாளம் எனப் பொருள். கை, கால் போன்ற எந்த உருவ அமைப்பும் இல்லாமல் அருவ வடிவில் பிரகாசிக்கும் சிவனின் அடையாளமே லிங்கமாகும்.
இவ்வுலகில் பெயர் மற்றும் உருவத்துடன் தோன்றும் அனைத்தும், இறுதியில் பிரளய காலத்தில் அதனதன் பெயர் மற்றும் உருவம் மறைந்து அருவமாக இறைவனிடத்தில் (லிங்கத்துக்குள்) அடங்குகிறது என்னும் சிறப்பும் லிங்கத்துக்கு உண்டு. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முதல் நாள் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியன்று சிவராத்திரி எனப்படும்.
ஜோதி ஸ்வரூபமாகப் பரமேசுவரன் நின்ற பொழுது, விஷ்ணு அவரது பாதத்தைப் பார்க்க பாதாளத்துக்குப் போனார். பூமியைக் குடையும் ஆற்றல் வராஹத்துக்கு உண்டு. எனவே, அந்த ரூபத்தை எடுத்துக் கொண்டார். பிரம்மா ஹம்ஸ ஸ்வரூபமானார். பட்சிக்குப் பறப்பது ஸ்வபாவம். பட்சியாகப் பறந்து ஜோதிர் லிங்கத்தின் முடி தேடிப்போனார். இரண்டு பேருக்கும் தேடிப் போனவை அகப்படவில்லை. ஹம்ஸம் வந்தது. நான் கண்டு விட்டேன் எனப் பொய் சொல்லியது. அதனால்தான் பிரம்மாவுக்குப் பிரத்தியேகமாகப் பூஜை இல்லாமற் போய் விட்டது.
மாக (மாசி) மாதத்தில் நிகழும் இந்த நாள் மகா சிவராத்திரி எனப்படும். இந்த மகா சிவராத்திரி நாளன்று நள்ளிரவு நேரத்தில் சிவலிங்கத்தின் வடிவத்தில் சிவன் தோன்றினார் என்கின்றன ஆகம சாஸ்திரங்கள். இவரே லிங்கோத்பவ மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். அந்த நாள் முதல் சிவனை பக்தர்கள் லிங்க வடிவில் பூஜிக்க ஆரம்பித்தார்கள்.