Publish Date: Mon, 30 Aug 2021 (09:21 IST)
Updated Date: Mon, 30 Aug 2021 (10:58 IST)
ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்க வல்ல வாய்ந்தவர் கண்ணன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வொருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று "திருவடிக் கோலம்" இடப்படுகிறது.
16,108 ராணிகளுடன் துவாரகையில் கண்ணன் அரசாட்சி செய்தான். அப்போது நாரத முனிவர், அரசிகள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோர் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார்.
அதேபோல் பிருந்தாவனத்தில் நடந்த "ராஸ லீலை"யிலும் ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணன் கூட இருந்து ஆடிப் பாடினார். இந்தக் காட்சியைச் சிவபெருமானே தரிசித்து ஆனந்தப்பட்டிருக்கிறார்.
இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்க வல்ல மகிமை வாய்ந்த தெய்வக் குழந்தை கண்ணன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வொருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று "திருவடிக் கோலம்" இடப்படுகிறது. அன்று எல்லோர் இல்லத்திலும் ஒரே நேரத்தில் "கிருஷ்ணரின் அருளாட்சி" இருக்கும். அதாவது கண்ணனின் அருட்சக்தி அங்கே கொலு வீற்றிருக்கும்.
கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தை பாத சுவட்டை மாக்கோலமாக வரைவது நாடெங்கும் எல்லா இடங்களிலும் மரபுவழி பழக்கமாக உள்ளது. இப்படி பாதம் வரைவதில் சைவ& வைணவ ஒற்றுமை இருப்பதாகச் சொல்கிறார்கள்.
குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு எட்டு (8) போன்ற வடிவுடன் இருக்கும். அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும். அதாவது ஓம் நமோ நாராயணா என்ற எட்டு எழுத்து மந்திரமும் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரமும் ஒருங்கிணைந்து இருப்பதைத் திருப்பாதம் பிரதிபலிக்கிறது.
கிருஷ்ணர் சிறுவனாக இருந்தபோது வெண்ணெய் திருடித் தின்றார். அப்போது வெண்ணெய் சிதறி அவர் உடம்பு மற்றும் கால்களில் விழுந்தது. அதோடு கிருஷ்ணர் நடந்ததால் கிருஷ்ணர் கால் தடம் பதிந்தது. அதை நினைவுப்படுத்தும் விதமாகக் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று மாவால் கால் சுவடு பதிக்கப்படுகிறது.
Sugapriya Prakash
Publish Date: Mon, 30 Aug 2021 (09:21 IST)
Updated Date: Mon, 30 Aug 2021 (10:58 IST)