Publish Date: Tue, 21 Nov 2023 (10:48 IST)
Updated Date: Tue, 21 Nov 2023 (10:53 IST)
நல்ல நாட்களில் நீராடி கோவில் சென்று தீபம் ஏற்றுவது தெய்வங்களின் பூரண அருளை தரும். கோவில்களில் தீபம் ஏற்றும்போது சில விஷயங்களை எப்போதுமே கவனத்தில் கொள்ள வேண்டும்.
பலரும் இந்த காலத்தில் கோவிலுக்கு செல்வதையே கடமையாக எண்ணி வேகமாக சென்று திரும்ப எண்ணுகிறார்கள். அவ்வாறு சென்று அவசரமாக செய்யும் விஷயங்கள் நமக்கு தெய்வங்களின் அருளை பெற்று தராது. கோவில்களில் தீபம் ஏற்றுவதில் முக்கியமாக இந்த அவசரத்தை செய்யவே கூடாது.
பெரும்பாலான கோவில்களில் தீபம் ஏற்றுவதற்காக தனி இடமே அமைக்கப்பட்டிருக்கும். மக்கள் பலரும் அங்கே சென்று ஏற்கனவே ஏற்றி வைத்துள்ள தீபத்தில் எண்ணெய்யை ஊற்றுவதோ அல்லது எரிந்து முடிந்த தீபத்தில் எண்ணெய்யை ஊற்றி விளக்கேற்றவோ செய்கிறார்கள். இது தவறு.
கோவில்களில் விளக்கேற்ற செல்பவர்கள் புதிதாக சிறிய அகல் விளக்கு, எண்ணெய், திரி கொண்டு செல்வது சிறந்தது. அகல் விளக்கு இல்லையென்றால் அங்கு உள்ள அகல் விளக்கின் ஒன்றை எடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்து அதில் புதிதாக எண்ணெய், திரி வைத்து விளக்கேற்றலாம்.
விளக்கு ஏற்றும்போது தீப்பெட்டியால் ஏற்றாமல் அருகில் உள்ள விளக்குகளில் நெருப்பை எடுப்பதும் தவறான நடைமுறையாகும். அதுபோல பலரும் அகல் விளக்குகளை ஏற்றி கண்கண்ட திசை நோக்கி வைத்துவிட்டு சென்றுவிடுவர். இதுவும் தவறான நடைமுறையாகும். எப்போதும் விளக்கின் முகம் தெய்வத்தின் கருவறையை நோக்கிய திசையில் (மேற்கு முகமாக) இருத்தல் வேண்டும்.
கோவில்களில் விளக்கேற்றுவது பல்வேறு சாஸ்திர நெறிகளுக்கு உட்பட்டது. அதை அவசரமின்றி முழு பக்தியுடன் சரியாக செய்யும்போது தெய்வங்களின் கடாட்ஷம் கிட்டும்.
Prasanth Karthick
Publish Date: Tue, 21 Nov 2023 (10:48 IST)
Updated Date: Tue, 21 Nov 2023 (10:53 IST)