வீடு கட்டும் முன்னர் செய்யப்படும் பூஜையில் முக்கியமான பகுதி வாஸ்து பூஜை. இந்த பூஜை செய்யப்படும் நாளே வாஸ்து நாள் என அழைக்கப்படுகிறது. மத்ஸ்ய புராணத்தின் படி, சிவபெருமான் அந்தகாசுரனை வதம் செய்தபோது, அவரது நெற்றியில் இருந்து விழுந்த வியர்வையால் ஒரு பூதம் தோன்றியது. அதன் தவத்தால், பூமியை விழுங்கும் சக்தி வந்தது. இதனை தடுக்க, தேவர்கள் அதை நிலத்தில் தள்ளி அழுத்தி வைத்தனர். அதனால், அது வாஸ்து புருஷன் என அழைக்கப்பட்டான்.
பூமியை தோண்டி கட்டடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் அவனுக்கே கிடைக்கும் என தேவர்கள் அருள் செய்தனர். வாஸ்து மண்டலம் என்பது, அவன் மேல் அமர்ந்த 53 தேவதைகளுடன் கூடிய சதுர வடிவம் கொண்ட அமைப்பு. இதன் நடுப்பகுதி பிரம்ம ஸ்தானம் எனப்படுகிறது.
ஒரு ஆண்டில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வருகின்றன சித்திரை முதல் மாசிவரை. இந்நாட்களில் ஒருநாள், ஒருவேளை மட்டும் (1.5 மணி நேரம்) வாஸ்து பகவான் விழிப்பில் இருப்பார் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
இந்த நேரத்தில் பூமி பூஜை செய்யும் போது, கட்டட பணிகள் தடையின்றி சிறப்பாக நடைபெறும் என நம்பப்படுகிறது.
இந்த ஆண்டு, வைகாசி 21-ஆம் தேதி புதன்கிழமை வாஸ்து பூஜைக்குத் உகந்த நாளாக கருதப்படுகிறது.