“சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டு ஈஷா அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் தியான பயிற்சிகளினால் மூளையின் வயது 5.9 ஆண்டுகள் வரை இளமையாகிறது” என ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்த மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனை மற்றும் பெத் இஸ்ரேல் டீக்கனஸ் மருத்துவ மைய ஆராய்ச்சியாளர்கள், ஈஷாவில் வழங்கப்படும் யோகா மற்றும் தியானங்கள் மூலம் மூளையில் நடைபெறும் மாற்றங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்விற்காக சத்குருவால் வழங்கப்படும் சம்யமா தியான பயிற்சியை மேற்கொண்டவர்கள் 40 நாட்கள் கடுமையான செயல்முறைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் தினமும் சைவ உணவு எடுத்துக் கொள்வது ஈஷாவில் வழங்கப்படும் ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா, ஷக்தி சலன க்ரியா, யோகாசனங்கள், சூன்ய தியானம் மற்றும் சுக க்ரியா உள்ளிட்ட யோக பயிற்சிகளை மேற்கொள்வது ஆகியன அடங்கும்.
இந்த ஆய்வு ஒருவர் தூக்கத்தில் இருக்கும் போது எடுக்கப்படும் EEG ஸ்கேன் முறையைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் ஆய்வாளர்கள் EEG தரவுகள் மூலம் மூளை வயது குறியீட்டை (BAI) அளவிட்டனர். இந்த அளவீடுகள் மூலம் மூளையின் வயது எவ்வளவு இளமையாகவோ அல்லது முதிர்ந்ததாகவோ இருக்கிறது என்பதை அறிய முடியும்.
இந்த ஆய்வின் முடிவுகளின் படி, சத்குருவின் தியான முறைகளை மேற்கொள்ளும் நபர்களுடைய மூளையின் வயது அவர்களின் உண்மையான வயதை விட கணிசமாக இளமையாக இருப்பது கண்டறியப்பட்டது. அதாவது, மூளையின் வயது சராசரியாக 5.9 ஆண்டுகள் இளமையாவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும் இந்த ஆய்வில் சில முக்கிய அம்சங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. சத்குரு வழங்கும் உயர்நிலை தியான பயிற்சிகளில் ஈடுபடுபவர்களின் மூளை இளமையாவதோடு அதன் வயதாகும் தன்மையும் வெகுவாக குறைந்து இருந்தது. அவர்களின் தூக்கத்தின் தரம் மேம்பட்டு இருந்தது, ஆழமான மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் தூக்கம் அவர்களின் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் நினைவாற்றல் கூர்மையாகவும், சிந்தனை தெளிவாகவும் இருந்தது. மன அழுத்தம் மற்றும் தனிமையாக உணரும் தன்மை வயதானவர்களை விட குறைவாக இருந்தது.
மொத்தத்தில், தியானம் மூளையை வயதாவதில் இருந்து பாதுகாக்கவும், அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவலாம் என ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன. இந்த ஆய்வு முடிவுகள் Mindfulness இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து இந்த ஆய்வின் மூத்த இணை ஆசிரியரும் மருத்துவருமான பாலசந்தர் சுப்ரமணியம் கூறுகையில் “இந்த ஆய்வு, சத்குருவால் வழங்கப்படும் “சம்யமா" மற்றும் “ஷக்தி சலன கிரியா” போன்ற ஆழமான யோக பயிற்சிகள் மூளை இளமையாக இருக்க உதவுகின்றன என்பதற்கு வலுவான ஆதாரங்களை அளிக்கின்றது. நம் பண்டைய யோகப் பயிற்சிகள் அறிவியல் சோதனைகளில் நிறுபிக்கப்படுவது ஊக்கமளிக்கிறது.” எனக் கூறினார்.
இது குறித்த சத்குருவின் எக்ஸ் தள பதிவில், “இன்றைய அறிவியலால், மனித இயந்திரத்தின் மீது உள்நிலை அறிவியல் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கண்டறிந்து அளவிட முடிவது அற்புதமானது. மனித இயந்திரத்தின் உயிரோட்டம் மற்றும் துடிப்பை மேம்படுத்துவது, முதுமையின் செயல்முறையையும் அறிவாற்றல் குறையும் செயல்முறையையும் இயற்கையாகவே மெதுவாக்கும். ஒவ்வொரு மனிதரும் தங்களது மனம் மற்றும் உடல் நலனில் முதலீடு செய்ய வேண்டும். நாம் இதை நமக்காகவும், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்காகவும், வருங்கால தலைமுறைகளுக்காகவும் செய்ய வேண்டும்.” எனக் கூறியுள்ளார்