Publish Date: Sat, 14 May 2022 (08:45 IST)
Updated Date: Sat, 14 May 2022 (08:47 IST)
பிரஹலாதனின் கதையில், நரசிம்ம அவதாரம் எடுத்து வந்து அவனது தந்தையை வதம் செய்த நாராயணன், நரசிம்மராக அவதரித்த நாளைத் தான் நரசிம்ம ஜெயந்தியாக வழிபடுகிறோம்.
இந்த ஆண்டு நரசிம்ம ஜெயந்தி மே 14 ஆம் தேதியான இன்று கொண்டாட உள்ளது. அதன்படி, நரசிம்ம ஜெயந்தியின் சதுர்த்தசி திதி மே 14 அன்று பிற்பகல் 3:22 முதல் மே 15 மதியம் 12:45 வரை உள்ளது. அதே போன்று, நரசிம்ம ஜெயந்தி பூஜை நேரமாக, மாலை 4:22 மணி முதல் 7:04 மணி வரை உள்ளது.
பிரஹலாதன் கதை அனைவரும் அறிந்ததே. அந்தக் கதையின் அவதாரப் புருஷர் நரசிம்மர். அன்றைய தினம் நரசிம்மருக்கு பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும். அதற்கு காரணம் அவர் உக்கிரமாக இருப்பதைத் தணிக்க.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், நரசிம்ம ஜெயந்தி கோடையில் வருவதால் மக்கள் தாகம் தணிவதன் பொருட்டும் இப்படி ஓர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம். மேலும், இந்த கதையில் ஒரு அறிவியல் விஷயம் உள்ளது.
உங்கள் குழந்தை வயிற்றில் இருக்கும்போது நீங்கள் என்ன பேசினாலும் செய்தாலும் அது அந்தச் சிசுவையும் பாதிக்கும் என்பதுதான். பிரஹலாதன் தன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது நாராயண நாமம் கேட்டுக் கொண்டிருந்த படியால், அவனுக்கு நாராயணன் மீது பக்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.