Publish Date: Sat, 27 Aug 2022 (15:56 IST)
Updated Date: Sat, 27 Aug 2022 (16:03 IST)
பிள்ளையார் சுழியை `நாத பிந்து' என்பர். பிள்ளையாருடன் சிவசக்தி யின் இணைப்பை இது உணர்த்துவதாக உள்ளதெனக் கூறப்படுகின்றது. எந்த ஒரு கருமத்தையும் ஆரம்பிப்பதற்கு முன்னர் பிள்ளையாரை வழிபட்ட பின்னரே ஆரம்பிக்கும் வழக்கம் உள்ளது.
மூலாதார மூர்த்தியாய், ஓங்கார பிரணவப் பொருளாய், முழுமுதற் கடவுளாய், தனக்கு மேல் நாயகன் இல்லாததால் 'விநாயகர்" என்றே புகழ்ந்து துதிக்கப்படும் கணபதிக்கு உகந்த விரதம் சதுர்த்தி விரதமாகும்.
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம், சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
சங்கடம் என்றால் துன்பம் என்றும், ஹர என்றால் ஒழிப்பது என்றும், சங்கடஹர என்றால் சங்கடங்களில் இருந்து விடுதலை அதாவது துன்பங்களிலிருந்து விடுதலை என்பதாகும்.
ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவி ன் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக் கூடியவர் விநாயகர்.
ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி அனைத்து காரியங்களும் வெற்றியடையும். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் சங்கடஹர சதுர்த்தி விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர்.