Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி விரத பலன்கள் பற்றி பார்ப்போம் !!

Ekadashi 1
, திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (10:19 IST)
அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. இதில் வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய்பிறையில் ஒரு ஏகாதசியும் வரும்.


ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.

சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி, ‘காமதா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி ‘பாப மோகினி ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு, அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப்பெறும்.

வைகாசி மாத வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி ‘மோகினி ஏகாதசி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘வருதித் ஏகாதசி’ என்றும் கூறப்படுகிறது. இந்த ஏகாதசி காலங் களில் விரதம் இருப்பவர்கள் அனைவரும், இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்ததற்கான பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ‘நிர்ஜலா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி ‘அபார ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.

ஆடி மாதத்து வளர்பிறை ஏகாதசி ‘சயனி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘யோகினி’ என்றும் பெயர்பெற்றுள்ளது. இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கப்பெறும்.

ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியானது ‘புத்ரஜா’ என்றும், தேய்பிறை ஏகாதசியானது ‘காமிகா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.

புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி, ‘பத்மநாபா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘அஜா’ என்றும் பெயர் பெற்றது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை வளரும்.

ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி ‘பாபாங்குசா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘இந்திரா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருப்பதால், வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி ‘பிரபோதின’ எனப்படும் இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலனும், தேய்பிறை ஏகாதசியான, ‘ரமா’ தினத்தில் இறைவனுக்கு பழங்களை கொண்டு நைவேத்தியம் செய்தால் மங்கள வாழ்வு கிடைக்கும்.

மார்கழி மாத ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி’ என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி ‘உத்பத்தி ஏகாதசி’ எனப்படுகிறது.

தை மாத வளர்பிறை ஏகாதசி ‘புத்ரதா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘சுபலா’ என்றும் பெயர் பெறும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம், ஒளிமயமான வாழ்வு அமையும்.

மாசி மாத வளர்பிறை ஏகாதசி ‘ஜெயா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘ஷட்திலா’ என்றும் அழைக்கப்படும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்கள், மூதாதையர்களின் முக்திக்கான வழியை பெறுவார்கள்.

பங்குனி தேய்பிறை ஏகாதசி ‘விஜயா’ எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறலாம். வளர்பிறை ஏகாதசி ‘ஆமலகி’ எனப்படும். அப்போது விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும். ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி ‘கமலா ஏகாதசி’ எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காமிகா ஏகாதசியில் துளசி வழிபாட்டு பலன்கள் !!