Publish Date: Fri, 27 Aug 2021 (23:59 IST)
Updated Date: Sat, 28 Aug 2021 (00:00 IST)
ஆலய கொடி மரம் மிகப்பெரிய தத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப்படுகிறது. கோவில்களில் பலிபீடத்திற்கு அருகே அமைக்கப்பெறுகின்ற கொடியேற்றுகின்ற மரம் கொடிமரம் ஆகும். இதற்கு துவஜஸ்தம்பம் என்ற பெயரும் உண்டு.
இந்து கோவில் கொடிமரங்கள் அடிப்பகுதியில் சதுரம், அதற்கு மேல் எண்கோணவேதி அமைப்பு மற்றும் தடித்த உருளை பாகம் என மூன்று பாகங்களைக் கொண்டது. இதில் சதுரப்பகுதிக்கு பிரம்மா அதிபதி, எண்கோணவேதி அமைப்புக்கு உரியவர் பெருமாள், உருளையமைப்பு சிவன் என முத்தேவர்களையும் குறிக்கிறது.
நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கோவிலுக்கு கொடிமரம் என்று நம் ஆகமங்கள் சொல்கின்றன. நம் முதுகுத் தண்டுவடத்தில் உள்ள 32 எலும்பு வளையங்களைப் போல கோவில் கொடி மரம் 32 வளையங்களுடன் அமைக்கப்படுகிறது.
நம் முதுகுத் தண்டில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை எனப்படும் ஆறு ஆதாரங்களும், இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளும் அமைந்துள்ளன. பொதுவாக இடை,பிங்கலை வழியாக செல்லும் பிராண வாயுவை, சுழிமுனை எனும் நடு நாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க, மனம் ஒரு நிலைப்படும். இந்த அடிப்படையில் தான் கொடி மரம் அமைக்கப்படுகிறது.
கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. கோவிலில் கொடிமரத்தை தொட்டு வணங்கினால் மட்டும் போதாது. சுற்றி வந்தும் வணங்குதல் வேண்டும்.
கொடி மரம் இருக்கும் பகுதியில் எந்த சன்னதியும் இருக்காது என்பதால்தான் கொடி மரம் அருகே விழுந்து வணங்க வேண்டும் என்கிறார்கள்.
ஆண்கள் எப்போதும் 2 கால்கள், 2 கைகள், 2 காதுகள், நெற்றி, மார்பு ஆகிய 8 உறுப்புகளும் தரையில் படும் வகையில் அஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும்.
பெண்கள் தலை, 2 முழங்கால், 2 உள்ளங்கைகள் ஆகிய 5 உறுப்புகள் தரையில்பட பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். கொடி மரத்தை வழிபடும்போது நேராக நின்று வணங்கக் கூடாது.