Publish Date: Mon, 05 Jun 2023 (08:48 IST)
Updated Date: Mon, 05 Jun 2023 (08:53 IST)
திருமணம் என்பது வாழ்வில் ஒருமுறை நிகழும் முக்கியமான நிகழ்வு. ஜாதகம், நேரம் என பல அம்சங்களும் ஒன்றாக கூடி வரும் நாளில் திருமணம் செய்வது வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக்கும்.
ஆனால் சிலருக்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளிட்ட தோஷங்களும் இருக்கும். மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஜாதக பொருத்தத்தில் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ராசிகள், நட்சத்திரங்கள் பொறுத்து ஒரு ஆண் மற்றும் பெண்ணின் ஜாதகங்கள் பொருந்தி போவதில் பல சிக்கல்கள் உள்ளன.
ஜாதகத்தில் பெரும்பாலும் பலருக்கு தெரிந்தது செவ்வாய் தோஷம் மட்டும்தான். ஆனால் ஜாதகத்தில் 12 வகை தோஷங்கள் உள்ளன. செவ்வாய் தோஷம், பித்ரு தோஷம், புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், ப்ரம்மஹத்தி தோஷம், நாக தோஷம், ராகு கேது தோஷம், நவகிரக தோஷம், சகட தோஷம், புனர்பூ தோஷம், தார தோஷம் என 12 தோஷங்கள் உள்ளது.
ஆனால் முறையாக ஜாதகம் பார்த்து தோஷங்களை நிவர்த்தி செய்வதன் மூலம் திருமண வாழ்க்கையில் இன்பகரமாக நுழையலாம். இந்த 12 தோஷங்களில் ஜாதகக்காரர்களுக்கு எந்த தோஷம் இருக்கிறதோ அதற்கு உண்டான கடவுளை வேண்டி ஜாதக கணிப்பாளர் பரிந்துரைக்கும் பரிகாரங்களை செய்வது அவசியம்.
எந்த தோஷம் இருப்பவர்களாக இருந்தாலும் உரிய பரிகாரங்களை செய்த பின் திருமணம் முடியும் வரை திங்கட் கிழமைகளில் சிவபெருமான் – பார்வதி தேவி இணைந்து அருள் பாலிக்கும் சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து சுயம்வர மந்திரத்தை பக்தியுடன் உச்சரித்து வர வேண்டும். பரிகாரத்தில் ஏதானும் தங்கு தடைகள், தவறுகள் நிகழ்ந்திருந்தாலும் கூட இந்த வேண்டுதல் அவற்றை நிவர்த்தி செய்வதாக அமையும்.