Publish Date: Tue, 04 Oct 2022 (11:55 IST)
Updated Date: Tue, 04 Oct 2022 (12:03 IST)
அன்னை துர்க்கை போருக்காக தன் ஆயுதங்களைப் பூஜித்ததை கொண்டாடும் விதமாகவும், பொதுமக்கள் தன் தொழிலுக்கான மூல ஆயுதமாக இருக்கும் பொருட்களை பூஜிக்கும் நாளாகவும் நவமி திதியில் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சரஸ்வதி பூஜை என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.
ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்துவதற்கு தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வருடம் முழுவதும் நமக்காக, நம் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், வாகனங்கள், பொருட்களுக்கு நாம் நன்றி சொல்வது இந்நாளின் நோக்கமாகும்.
அன்றைய நாள் வீடு, கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் கடவுளின் இருப்பிடமாகும். அன்றைய நாள் வாகனங்களையும் சுத்தம் செய்தல் அவசியம். தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சுத்தம் செய்தல் வேண்டும்.
சுத்தம் செய்த பின் தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கடவுளாக எண்ணி பூஜை செய்ய வேண்டும். பூஜையின்போது பொரி, பழங்கள், பேரீச்சம்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடுவது சிறப்பு. செய்யும் தொழிலே தெய்வம்.
நாம் செய்யும் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களை கடவுளாக போற்றி வணங்குவது ஆயுத பூஜையின் நோக்கமாகும். ஆயுத பூஜையன்று, ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று உறுதி கொள்ள வேண்டும்.