Publish Date: Fri, 22 Jul 2022 (11:44 IST)
Updated Date: Fri, 22 Jul 2022 (12:56 IST)
எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு.
ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருமேனியைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் “கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி” அன்று தேடிச்சென்று வழிபட வேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும்.
ஆடி வெள்ளியில் திருமகளை வழிபடுவதன் மூலமும் செல்வநிலை உயரும். எட்டுவகை லட்சுமிக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும். கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும்.
துள்ளித் திரியும் சிங்கத்தில் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும் என்பதை அனுபவத்தில் காணலாம்.
பூஜை அறையில் வரலட்சுமியின் படத்தை பலகை மேல் நடுவில் வைக்க வேண்டும். அதன் அருகில் ஐந்து முக விளக்கில் பஞ்ச எண்ணெய் ஊற்றி பஞ்ச முக தீபம் ஏற்ற வேண்டும்.
அருகில் நெல் பரப்பி அதன்மேல் ஒரு தட்டில் அரிசி பரப்பி வைக்க வேண்டும். குடத்திற்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, இனிப்புப் பொருள் நைவேத்தியத்தோடு லட்சுமி கவசம் பாடி வழிபாடு செய்தால் பணத் தேவைகள் பூர்த்தி யாகும்.