Publish Date: Sat, 12 Aug 2017 (16:12 IST)
Updated Date: Sat, 12 Aug 2017 (16:19 IST)
1918ஆம் ஆண்டு வெள்ளையர் ஆட்சி, ரெளலட் சட்டம் என்கின்ற ஒரு அடக்குமுறை சட்டத்தை நடைமுறைப்படுத்தி, எந்தவொரு அரசியல்வாதியையும் எவ்வித காரணமும் காட்டாமல் விசாரணை ஏதும் நடத்தாமல் கைது செய்யவும், சிறையில் அடைக்கவும் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
இச்சட்டத்தை பாலகங்காதர் திலகரும், மகாத்மா காந்தியும் வன்மையாகக் கண்டித்தனர். பஞ்சாப் மாகாணத்தில் ராணுவச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதியன்று ஜெனரல் டையர் என்ற வெள்ளைய அதிகாரி எந்தப் பொதுக் கூட்டமும் நடத்தக் கூடாது என்றும் மக்கள் எங்கும் கூடக் கூடாது என்றும் ஒரு உத்தரவு பிறப்பித்தார்.
மறுநாள் அறுவடை விழாவைக் கொண்டாட ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். எல்லா பக்கத்திலும் பெரும் மதில் சுவர்களால் சூழப்பட்ட அந்த மைதானத்திற்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் அமைதியாக திரண்டிருந்த நிலையில் தனது படையினருடனும், ஆயுதங்களுடன் நுழைந்த ஜெனரல் டையர் அந்த மைதானத்தில் இருந்து வெளியேறும் அனைத்துக் கதவுகளையும் மூடிவிட்டு அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். தங்களிடம் இருந்த தோட்டாக்கள் அனைத்தும் தீரும் வரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
ஆயுதங்கள் ஏதுமின்றி குழந்தைகளும், பெண்களும், பெரியோர்களுமாக திரண்டிருந்த மக்களின் மீது நடத்தப்பட்ட இந்த காட்டுமிராண்டித்தனத்தில் 1,700 பேர் உயிரிழந்தனர்.
அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் வெள்ளையர் ஆட்சி மீது வெறுப்புணர்வை அதிகரித்தது. எதிர்ப்பு மேலும் தீவிரமானது.