வோடபோன் ஐடியா லிமிட்டெட்: வெளியாகியுள்ள தகவல்...
Publish Date: Mon, 18 Jun 2018 (14:13 IST)
Updated Date: Mon, 18 Jun 2018 (16:09 IST)
இந்திய டெலிகாம் சந்தையில், ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களை அடுத்து வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் மக்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்படும் நெட்வொர்க்காக உள்ளது.
இந்நிலையில், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைப்பு குறித்து பேச்சு எழுந்தது. இதற்காக தீவிர முயற்சிகளும் செயல்படுத்தப்பட்டன. இதற்கு பலனாக இந்த இணைப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவலை டிராய் வெளியிடும் என தெரிகிறது.
இந்த இருநிறுவனங்கள் இணைப்பு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் வோடபோன் ஐடியா லிமிட்டெட் என்ற பெயரில் இவை இயங்கும். அதோடு இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக உருவெடுக்கும் என கூறப்படுகிறது.
இரு நிறுவனங்களின் மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இரு நிறுவனங்கள் இணைந்ததும், சுமார் 43 கோடி வாடிக்கையாளர்களுடன் டெலிகாம் சந்தையின் 35% பங்குகளை பெறும்.
இரண்டு நிறுவனங்களின் ஒன்றிணைந்த கடன் சுமை இந்திய மதிப்பில் ரூ.1.15 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த இணைப்பின் மூலம், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களின் கடன் சுமை குறையும் என கூறப்படுகிறது.
வோடபோன் 45.1 சதவிகிதம், ஆதித்யா பிர்லா குழுமத்தின் 26 சதவிகிதம் மற்றும் ஐடியா 28.9 சதவிகிதம் என பங்குகள் சொந்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு, ஐடியா, ஜூன் 26 ஆம் தேதி பொது கூட்டம் ஒன்றை நடத்தி, இணைப்பு முடிந்தபின் வோடபோன் ஐடியா லிமிடெட் என பெயரை மாற்றும் என தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்